மழையால் பாதித்த 2 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம்... ரூ.208 கோடியை ஒதுக்கீடு செய்தது அரசு!


வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யும் எம் ஆர் கே பன்னீர்செல்வம்

கடந்த டிசம்பரில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ரூ.208 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' என்ற முதலமைச்சர் பெயரிலான புதிய திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2024 - 25 ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அத்துடன் புதிதாக சில திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில் ஒன்றாக 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்' என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மண்ணை பேணிக் காக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமான உயிர் வேளாண்மை போன்ற அனைத்து செய்முறைகளையும் ஊக்கப்படுத்த ‘முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்’ என்ற புதிய திட்டம் ரூ.206 கோடி நிதியில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றம்

இயற்கைப் பேரிடர் காரணமாக ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு ரூ. 380.40 கோடி நிவாரணத்தொகை 4.5 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதாக பட்ஜெட்டில் வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பரில் தென்மாவட்டங்களில் பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் இதற்காக ரூ.208 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10,000 விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ரூ.6 கோடி மானியம் வழங்கப்படுகிறது. அமிலம் கலந்த நிலத்தை சீர்படுத்த ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு. பூச்சிநோய் தாக்கத்தை கட்டுப்படுத்த 10 லட்சம் வேப்ப மர கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில் 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டுக் கடனுக்கான வட்டி மானியத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாக உணவு மானியத்திற்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத் தொகை வழங்குவதற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று மேலும் பல அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


நடிகர் விஜய் கட்சியினர் மீது வழக்குப் பாய்ந்தது... கொடியும் அகற்றம்!

x