கூடலூர் அருகே ஆதிவாசி பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸில் பிரசவம்!


கூடலூர் அருகே 108 ஆம்புலன்ஸில் அவசர உதவியாளர் கோகுல் பிரசவம் பார்த்ததில், பழங்குடியின பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தை.

கூடலூர்: கூடலூர் அருகே ஆதிவாசி பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸில் அழகான பெண் குழந்தை பிறந்தது. நீலகிரி மாவட்டம் சேரம்பாடி அருகே கையுண்ணி பகுதியைச் சேர்ந்தவர் விஜய். நிறைமாத கர்ப்பிணியான இவரது மனைவி ராஜூசாவுக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில் 108 ஆம்புலன்ஸ் வந்துள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கோபிநாதன், அவருடன் அவசரகால மருத்துவ உதவியாளர் கோகுல் இருந்தார்.

சேரம்பாடி சுகாதார நிலையத்துக்கு ராஜூஷா அழைத்துச் செல்லப் பட்டார். அங்கு முதலுதவி அளிக்கப் பட்டு, பின்னர் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் தேவாலா அருகே நீர்மட்டம் என்ற இடத்தில் பிரசவ வலியால் ராஜூசா துடித்தார்.

இதனால், அவசர மருத்துவ உதவியாளர் கோகுல், ஆம்புலன்ஸை அங்கேயே நிறுத்தி பிரசவம் பார்த்தார். இதில் ராஜுசாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்து கணவரும், ராஜூஷாவும் மகிழ்ச்சியடைந்தனர். அதன்பிறகு, தாய், சேய் இருவரையும் கூடலூர் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அனுமதித்தனர்.

x