‘சம்பாதிக்கும் பெண்ணைவிட குடும்பத் தலைவி பணி குறைந்ததல்ல’ மீண்டும் குட்டு வைத்தது உச்ச நீதிமன்றம்


இல்லத்தரசி - சம்பாதிக்கும் பெண்

‘சம்பாதிக்கும் பெண்ணைவிட குடும்பத் தலைவியாக வீட்டில் கடமையாற்றும் இல்லத்தரசியின் பணி எந்த வகையிலும் குறைந்தததல்ல’ என வழக்கு ஒன்றின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் விளக்கி உள்ளது.

சம்பாதிக்கும் பெண் - வீட்டிலிருந்தபடி குடும்பக் கடமைகளை ஆற்றும் இல்லத்தரசி ஆகியோருக்கு இடையே பேதம் பார்ப்பது தனி மனிதர் முதல் சமுதாயம் வரை தொடரவே செய்கிறது. வெளியில் சென்று சம்பாதிக்கும் பெண் அவரது வருமானத்தால் அளவிடப்படுவதும், வீடுகளில் கடமையாற்றும் பெண்களை அந்த வகையில் நிர்க்கதியாக்குவதும் தொடர்கிறது.

இல்லத்தரசி

சமுதாயத்தின் இந்த கேடான மனநிலையை மாற்றும் நோக்கிலும், இல்லத்தரசிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், மகளிர் உரிமைத் தொகை என்ற முன்னோடி திட்டத்தை தமிழகம் தொடங்கி பல்வேறு மாநிலங்கள், வெவ்வேறு பெயர்களில் செயல்படுத்தி வருகின்றன.

நிதர்சனத்தில், வீட்டிலிருந்து குடும்பக் கடமைகளை ஆற்றும் மகளிர் எந்த வகையிலும் குறைவானவர்கள் இல்லை என்று பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளன. இந்த வரிசையில் மற்றுமொரு தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ‘சம்பாதிக்கும் பெண்ணைவிட குடும்பத் தலைவி பணி எந்த வகையிலும் குறைந்ததல்ல’ என மீண்டும் பிற்போக்கு மனப்போக்கிற்கு குட்டு வைத்துள்ளது.

உத்தராகண்டைச் சேர்ந்த ஒரு பெண் சாலை விபத்தில் உயிரிழந்தார். இழப்பீடு கேட்டு அவருடைய கணவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த, மோட்டார் வாகன சட்டத் தீர்ப்பாயம் ‘விபத்தில் இறந்த பெண், வேலைக்கு சென்று சம்பாதிப்பவர் அல்ல. குடும்பத் தலைவியாக உள்ளதால் ரூ. 2.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. உயர் நீதிமன்றமும் இதை உறுதி செய்தது.

நீதிமன்ற உத்தரவு

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, நீதிபதிகள் சூரியகாந்த், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பில், ‘‘வீட்டு வேலைகளை கவனிக்கும் பெண்கள் மிகவும் உயர்வானவர்கள். அவர்களது பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது; அதை பணத்தால் மதிப்பிடவும் முடியாது.வேலைக்குச் செல்லும் பெண்களைவிட, குடும்பத் தலைவியின் பணிகள் குறைந்தது அல்ல. ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.

x