தமிழகம் நூற்றுக்கணக்கான கொடிகளையும், தலைவர்களையும் பார்த்துள்ளது - வானதி சீனிவாசன்


கோவை: தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கோவை சூலூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டி நேற்று நடந்தது. பல்வேறு வகையான கைத்தறி ஆடைகளை அணிந்தபடி மாணவ, மாணவிகள் மேடையில் தோன்றினர்.

பாஜக தேசிய மகளிரணி தலைவரும் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், நடிகை நமீதா ஆகியோர் மாணவ, மாணவிகளுடன் இணைந்து ஆடை அணிவகுப்பில் பங்கேற்றனர். தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

பின்னர், வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கைத்தறி நெசவு குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 7-வது ஆண்டாக கைத்தறி நெசவு ஆடை அணிவகுப்பு போட்டிகளை நடத்தியுள்ளோம்.

கைத்தறி நெசவாளர்களை ஆதரிக்க வேண்டும். கைத்தறி உற்பத்தி அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தியுள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள். தமிழகம் இதுபோன்ற நூற்றுக்கணக்கான கொடிகளையும், தலைவர்களையும் பார்த்துள்ளது என்றார்.

x