ஓரம் போ... அளவுக்கு அதிகமான போதையோடு அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர்...பயத்தில் அலறிய பயணிகள்!


பேருந்து ஓட்டுநரிடம் மது சோதனை

நாகையிலிருந்து சென்னை சென்ற அரசு விரைவு பேருந்தின் ஓட்டுநர் குடிபோதையில் பேருந்தை இயக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினத்தில் இருந்து சென்னை செல்லும் தமிழக அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்து நேற்று இரவு காரைக்கால் பேருந்து நிலையம் வந்தது. அப்போது பேருந்தில் இருந்து இறங்கிய பயணிகள் சிலர், புறக்காவல் நிலைய காவலர்களிடம் தங்கள் வந்த பேருந்தின் ஓட்டுநர் மது போதையில் இருப்பதாக புகார் தெரிவித்தனர்.

பேருந்து காரைக்கால் மாவட்ட எல்லையான வாஞ்சூர் பகுதியில் வந்தபோது சாலையின் குறுக்கே இருந்த இரும்பு தடுப்புகளின் மீது மோதியதையும், நாகூா் அருகே ஆட்டோவின் மீது மோத இருந்ததையும் பயத்துடன் எடுத்துக் கூறினர்.

இதையடுத்து, போக்குவரத்துக் காவல் நிலைய போலீஸார் விரைந்து சென்று, பேருந்து ஓட்டுநரான திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியை சோந்த செல்வராஜை அழைத்து வந்து மது குடித்திருப்பதை உறுதி செய்யும் பிரீத் அனலைஸர் சாதனம் மூலம் பரிசோதித்தனர். அப்போது ஆல்கஹாலின் அளவு 274க்கும் அதிகமாக இருந்ததை போலீஸார் உறுதி செய்தனர்.

இதுகுறித்து உடனடியாக நாகப்பட்டினம் போக்குவரத்துக் கழக கிளை அலுவலக அதிகாரிகளிடம் காரைக்கால் போலீஸார் தகவல் தெரிவித்தனர். அதைத்தொடா்ந்து நாகையிலிருந்து வேறு பேருந்து அனுப்பி வைக்கப்பட்டது. அதில் நாகையிலிருந்து வந்த பயணிகளும், காரைக்காலில் ஏற காத்திருந்த பயணிகளும் அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்த சம்பவம் காரைக்கால் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

அடுத்த அதிர்ச்சி... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது பாட்டில், கல்வீச்சு!

x