தந்தையின் உயிரைக் காக்க பாசப் போராட்டம்... தள்ளுவண்டியில் வைத்து 35 கி.மீ மருத்துவமனைக்கு ஓட்டி வந்த சிறுமி!


தந்தையை 35 கி.மீ தள்ளுவண்டியில் அழைத்துச் சென்ற சிறுமி சுஜாதா

ஒடிசாவில் தந்தையின் உயிரைக் காப்பாற்ற 14 வயது சிறுமி சுமார் 35 கிலோமீட்டர் தள்ளுவண்டியில் வைத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சம்பவம், பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தில் உள்ள நாதிகான் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷம்புநாத். இவர் தள்ளுவண்டியை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவருக்கு 14 வயதான சுஜாதா சேத்தி என்கிற மகள் உள்ளார். கடந்த அக்டோபர் 22-ம் தேதி நிலத்தகராறு தொடர்பாக சிலர் ஷம்புநாத்தை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த அவரை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல போதிய வசதிகள் இல்லாததால், அவரது மகள் சுஜாதா உடனடியாக தள்ளு வண்டியில் வைத்து அவரை 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாம்நகர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு போதிய வசதிகள் இல்லாததால் உடனடியாக அவரை பத்ரக் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

தந்தையை காக்க 35 கிலோமீட்டர்கள் தள்ளுவண்டியில் அழைத்து சென்ற சிறுமி சுஜாதா

ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்ல பணம் இல்லாத நிலையில், செல்போனும் இல்லாததால் தவித்து போன சுஜாதா, தனது தந்தையைக் காப்பாற்ற அதிரடி முடிவு ஒன்றை எடுத்தார். அதன்படி சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு தனது தந்தையை தள்ளு வண்டியிலேயே அழைத்துச் செல்ல அவர் முடிவெடுத்தார்.

அங்கு சென்ற போது, மாவட்ட மருத்துவமனையிலும் அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதால் அடுத்த வாரம் வருமாறு ஷம்புநாத்தை மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மருத்துவமனையில் தங்குவதற்கான வாய்ப்பு இல்லாததால் மீண்டும் தனது சொந்த ஊருக்கு சுமார் 50 கிலோ மீட்டர்கள் பயணிக்க வேண்டும் என்ற நிலையில் கண்ணீருடன் கிளம்பினார் சுஜாதா.

தந்தையை தள்ளுவண்டியில் அழைத்து சென்ற சிறுமி சுஜாதா

காயங்களுடன் ஒருவரை சிறுமி ஒருவர் தள்ளு வண்டியில் அழைத்துச் செல்வதை கண்ட பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள், அவரிடம் கேள்வி எழுப்பிய போது, இந்த சம்பவங்கள் யாவும் தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த பத்ரக் எம்எல்ஏ சஞ்சிப் மல்லிக் மற்றும் தாம்நகர் முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திர தாஸ் ஆகியோர் உடனடியாக சிறுமிக்கு உதவ முன் வந்தனர்.

இதையடுத்து, பத்ரக் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷம்புநாத்திற்கு ஒரு வாரம் மருத்துவமனையிலேயே தங்கி அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஆகும் செலவு அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், சமூக வலைதளங்களில் சிறுமி சுஜாதாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...


வில்வித்தை போட்டியில் கை இல்லாத இந்திய வீராங்கனை ஷீத்தல் தங்கம் வென்று சாதனை

நீட் விலக்கு மசோதா... நேரடியாக குடியரசுத் தலைவரிடமே முதல்வர் வலியுறுத்தல்!

x