ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு...மல்லிகை கிலோ ரூ.1000


மல்லிகைப்பூ விற்பனை

தமிழகத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மல்லிகைப் பூ

ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழகத்திலுள்ள மலர் சந்தைகளில் பூக்களின் விலை சற்று அதிகரித்துள்ளது. நேற்று வரை ஒரு கிலோ மல்லிகை 750 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

முல்லைப் பூ 500 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் ரூ.800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, பிச்சிபூ 800 ரூபாய்க்கும்,கெந்தி 50ரூபாய்க்கும்,சேவல்கொண்டை பூ 80 ரூபாய்க்கும்,அரளிபூ 350 ரூபாய்க்கும், கனகாம்பரம் நேற்று 500-க்கு விற்பனையான நிலையில் இன்று 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று சாமந்தி, சம்பங்கி, ரோஸ், அரளி, செண்டுமல்லி ஆகிய பூக்களின் விலையும் நேற்றை விட. இன்று சற்று விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. ஆயுதபூஜை மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு, இன்று முதல் பூக்களின் விலை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், மல்லிகைப் பூ விலை இருமடங்கு உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

x