ஐபிஎஸ் அதிகாரியை நெகிழ வைத்த விமான பணிப்பெண்ணின் செயல்!


ஐபிஎஸ் அதிகாரியின் பதிவு வைரல்

நவராத்திரியின் போது விரதத்தில் இருந்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு விமான பணிப்பெண் அளித்த உணவு வகைகள் பயணிகளிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அருண் போத்ரா என்பவர் நவராத்திரி விரதம் இருந்து வருகிறார். இவர் கடந்த 18ம் தேதி இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தார். அப்போது தான் நவராத்திரி விரதத்தில் இருப்பதால் வழக்கமான சிற்றுண்டி வேண்டாம் என விமான பணிப்பெண் பூர்வி என்பவரிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட மிதமான சிற்றுண்டி மற்றும் தேநீருடன் ஒரு சிறு துண்டு சீட்டையும் பூர்வி வழங்கி உள்ளார். அதில் இண்டிகோவில் பயணித்ததற்கு நன்றி என்றும் துர்க்கை அம்மன் உங்களை ஆசிர்வதிக்கட்டும் எனவும் அதில் எழுதப்பட்டிருந்தது.

விமானத்தில் வழங்கப்பட்ட விரத கால உணவு

இந்த பதிவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி அருண் போத்ரா, இண்டிகோ நிறுவனத்திற்கும் பணிப்பெண் பூர்விக்கும் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். நவராத்திரி விரதம் இருப்பவர்கள் வழக்கமான சிற்றுண்டி எடுத்துக் கொள்வதில்லை. மாறாக மிகவும் லேசான எள்ளால் செய்யப்பட்ட மிட்டாய்கள் உள்ளிட்ட உணவு வகைகளை மட்டுமே எடுத்துக் கொள்கின்றனர். பணிப்பெண் பூர்வியும் நவராத்திரி விரதத்தில் இருந்ததால் இந்த உணவு வகைகளை போத்ராவுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.

இண்டிகோ நிறுவனம் சார்பில் நன்றி தெரிவித்து ட்விட்

இந்த பதிவுக்கு நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ள இண்டிகோ நிறுவனம், இந்த வார்த்தைகள் தங்களை மிகவும் உற்சாகப்படுத்துவதாகவும் எங்களின் செயல் உங்களின் பயணத்தை சிறப்பாக்கியதற்கு வாழ்த்துகள் எனவும் தெரிவித்துள்ளது. தற்போது இந்த எக்ஸ் தள பதிவு, இணையதளத்தில் வேகமாக பரவி வருவதோடு, பணிப்பெண் பூர்வியின் செயலுக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

x