மேட்டூர் உபரிநீர் திட்டத்தில் 14 ஏரிகள் நிரம்பின: இதுவரை 0.12 டிஎம்சி நீர் மட்டுமே பயன்படுத்தப்பட்டது


மேட்டூர் உபரிநீர் திட்டத்தில் முழுமையாக நிரம்பியுள்ள செக்கான் ஏரி.

மேட்டூர்: மேட்டூர் உபரிநீர் திட்டத்தில், 0.12 டிஎம்சி நீர் எடுக்கப்பட்டு இதுவரை 14 ஏரிகள் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் காவிரி உபரி நீரை, சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றம் மூலம் நீர் வழங்கும் திட்டம் ரூ.673.88 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், கர்நாடகாவின் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. எனவே காவிரியில் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை கடந்த 30ம் தேதி எட்டியது.

இதையடுத்து அணைக்கு வந்த நீர் முழுவதும் 16 கண் மதகு வழியாகவும், நீர் மின் நிலையம், கால்வாய் வழியாகவும் அப்படியே வெளியேற்றப் பட்டது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து, மேட்டூர் உபரி நீர் திட்டத்தின் படி, மேட்டூரை அடுத்த திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து ஏரிகள், குளங்களுக்கு நீர் நிரப்பும் பணி கடந்த 31ம் தேதி தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம் மேட்டூர், ஓமலுர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 4 வட்டங்களில் உள்ள 56 ஏரிகளுக்கு நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில், தற்போது வரை, 14 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:"மேட்டூர் திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து எம்.காளிப்பட்டி ஏரி மற்றும் நங்கவள்ளி ஏரி ஆகியவற்றின் வழியாக, நீர்நிலைகளுக்கு நீர் நிரப்பட்டு வருகிறது. இதற்காக நீரேற்று நிலையத்தில் இருந்து விநாடிக்கு 214 கனஅடி நீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதில், எம்.காளிப்பட்டி வழியில் 8 ஏரிகளும், நங்கவள்ளி வழியில் 6 ஏரிகளும் முழுமையாக நிரம்பியுள்ளன. மேலும், 2 ஏரிகள் 70 சதவீதம் நிரம்பியுள்ளன. உபரி நீர் திட்டத்தில் இதுவரை 0.12 டிஎம்சி நீர் எடுக்கப்பட்டுள்ளது” என்று அதிகாரிகள் கூறினர்.

x