மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி விமான சேவை... அக்.22-ம் தேதி முதல் பறக்கலாம்!


ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்

தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால், சொந்த ஊருக்கு செல்வோர் தற்போது முதலே விமானம், ரயில், பஸ் உள்ளிட்டவைகளில் முன்பதிவு செய்து வருகின்றனர். அதேபோல், வெளிநாடுகளில் வசித்து வரும் தமிழகத்தை சேர்ந்த பயணிகள் வசதிக்காக விமான நிறுவனங்களும் புதிய விமான சேவைகளை அதிரடியாக அறிவித்து வருகின்றன.

அதில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் மதுரை, சிங்கப்பூர் இடையே நேரடி மற்றும் தினசரி விமான சேவை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த சேவை வரும் 22-ந் தேதி முதல் இந்த விமான சேவை பயன்பாட்டிற்கு வருகிறது. இதையடுத்து, இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி விமான சேவை வழங்கப்படும் என்ற அறிவிப்பு, சிங்கப்பூர் வாழ் தமிழர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x