ராயப்பேட்டையில் உள்ள வங்கியில் எலியின் சேட்டையால் ஒலித்த பாதுகாப்பு அலாரம்


பிரதிநிதித்துவப் படம்

சென்னை: சென்னை ஒயிட்ஸ் சாலையில் எஸ்பிஐ வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் நேற்று முன்தினம் இரவு திடீரென பாதுகாப்பு அலாரம் ஒலித்தது. இதையடுத்து அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் இது குறித்து அண்ணாசாலை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த போலீஸார், வங்கியை சுற்றி சோதனை செய்தனர். அப்போது, வங்கியின் கதவு, ஜன்னல் எதவும் திறப்படாமல் இருப்பதையும், ஆனால், உள்ளே அலாரம் ஒலிப்பதையும் கண்ட போலீஸார், உடனே வங்கி மேலாளரை தொடர்பு கொண்டு சம்பவ இடத்துக்கு வரவழைத்தனர். பின்னர், வங்கியைத் திறந்து உள்ளே சென்ற போலீஸார், வங்கியினுள் மர்ம நபர்கள் யாரேனும் இருக்கிறார்களா, பணம், முக்கிய ஆவணங்கள் ஏதேனும் திருடு போயிருக்கிறதா என்று சோதனை செய்தனர்.

ஆனால், வங்கியினுள் யாரும் இல்லாததை அறிந்த போலீஸார், பாதுகாப்பு அலாரம் எப்படி ஒலித்தது என்பது குறித்து ஆராய்ந்தபோது, வங்கியினுள் சுற்றிக் கொண்டிருந்த எலியின் சேட்டை காரணமாக அலாரம் ஒலித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இரவு நேரத்தில் வங்கியில் பாதுகாப்பு அலாரம் ஒலித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

x