பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்...தமிழகம் முழுவதும் இன்று முதல் 13,184 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!


பயணிகள் கூட்டம்(கோப்பு படம்)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு 13,184 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் 6 இடங்களில் இருந்து பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயணிகள்

பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காக சென்னையில் இருந்து நாள்தோறும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 4,706 சிறப்பு பேருந்துகளும், மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 8,478 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் இன்று (ஜன.12) முதல் 3 நாட்களுக்கு மொத்தம் 13,184 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். அதன்படி, இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்து இன்று வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 901 சிறப்பு பேருந்துகளும், பிற பகுதிகளில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 1,986 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் மாதவரம் பேருந்து நிலையம், கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையம், தாம்பரம் சானடோரியத்தில் மெப்ஸ் மற்றும்வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி மாநகர போக்குவரத்து கழகபணிமனை, கோயம்பேடு, கிளாம்பாக்கம் என 6 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து நிலையங்களுக்கு பயணிகள் செல்ல வசதியாக, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், 450 சிறப்பு பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

அரசு போக்குவரத்து பேருந்துகள்

பேருந்து இயக்கம் தொடர்பான விவரங்களை 9445014450, 94450 14436 ஆகிய செல்போன் எண்களில் அறியலாம். கிளாம்பாக்கம், கோயம்பேட்டில் தலா 5, தாம்பரம் சானடோரியத்தில் ஒன்று என மொத்தம் 11 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, tnstc இணையதளம் அல்லது செயலி வாயிலாகவும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.பொங்கலை முன்னிட்டு இதுவரை 1.24 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து செல்வதற்கு 83 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, வழக்கம்போல ஆம்னி பேருந்துகளின் கட்டணமும் உயர்த்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். குறிப்பாக சென்னையில் இருந்து நெல்லைக்கு இருக்கையில் பயணிக்க குறைந்தபட்சம் ரூ.2,000 வசூலிக்கப்படுகிறது. இது ஆம்னி பேருந்துஉரிமையாளர்கள் சங்க இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளதைவிட அதிகம் என பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிக கட்டணம் தொடர்பான புகார்களை 1800 425 6151, 044-24749002, 26280445, 26281611 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

x