கொடிவேரி அணையில் நீர் திறப்பு- சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை


கொடிவேரி அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு

ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணையில் இருந்து 1,302 கன அடி நீர் திறக்கப்பட்டு வருவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று கொடிவேரி அணை. இந்த அணைக்கு ஈரோடு மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு வரும் உபரிநீர் பவானி ஆறு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கொடிவேரி அணை வழியாக 1,302 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானி ஆற்றில் 1,302 கன அடி தண்ணீர் வெளியேறி வருவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி கொடிவேரி அணைகட்டுக்கு வரவோ, குளிக்கவோ பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். மேலும் பவானி ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் கால்நடைகள் மேய்க்கவோ, துணி துவைக்கவோ ஆற்றில் இறங்க வேண்டாம் எனவும், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும் பொதுபணித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

x