அயோத்தி ராமர், அஷ்ட ஆஞ்சநேயர் தொகுப்பு... - மதுரையில் புதிதாக அணிவகுக்கும் கொலு பொம்மைகள்!


நவராத்திரி விழாவை முன்னிட்டு மதுரை விளாச்சேரி பகுதியில் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி |

மதுரை: மதுரை விளாச்சேரியில் நவராத்திரிக்காக கொலு பொம்மைகள் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த ஆண்டு முன்கூட்டியே விற்பனை தொடங்கியுள்ளது.

மதுரை அருகே விளாச்சேரியில் 200-க்கும் மேற்பட்ட மண்பாண்டத் தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு சமையலுக்குப் பயன்படும் மண்பானைகள் முதல் கலைப்பொருட்கள் வரை தயாரிக்கின்றனர். நவராத்திரி விழாவை முன்னிட்டு புதிய ரக கொலு பொம்மைகள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளன.

இதுகுறித்து மண்பாண்டக் கலைஞர் ரா.ஹரிகிருஷ்ணன் கூறியதாவது: அக். 3-ம் தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது. இதைக் கருத்தில்கொண்டு ஏராளமான புதிய ரக களிமண் பொம்மைகள், காகிதக்கூழ் பொம்மைகள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வைத்துள்ளோம்.

அயோத்தி ராமர், அஷ்ட ஆஞ்சநேயர், நிச்சயதார்த்த தொகுப்பு, ஆண்டாள் பெயர் சூட்டுதல், சிறுவர்களுக்கான தாயம் விளையாட்டு, பல்லாங்குழி விளையாட்டு தொகுப்பு, நவநரசிம்மர், அஷ்டவராகி, அஷ்டபைரவர், அஷ்டதிக்கு பாலகர் ஆகிய புதிய தொகுப்புகளை உருவாக்கியுள்ளோம்.

இதற்கு மக்களிடையே வரவேற்புள்ளதால் தற்போதே வெளியூர்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஆர்டர்கள் கிடைத்துள்ளன. மேலும் வழக்கம்போல் திருப்பதி பிரம்மோற்சவம், மீனாட்சி திருக்கல்யாணம், ராமாயண கதைகள், கிரிவலம், சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம், மனிதர்களின் திருமணம், வளைகாப்பு, சாப்பாடு, காதணி விழா, பூணூல் விழா போன்றவற்றையும் தொகுப்புகளாக உருவாக்கியுள்ளோம்.

இதில் திருவள்ளுவர், தேசியத் தலைவர்களான மகாத்மா காந்தியடிகள், பாரதியார் போன்ற களிமண் பொம்மைகள் உள்ளன. இதுபோன்று 150 வகையான தொகுப்புகள் உள்ளன. கதைகளைப் பொருத்து ஒரு தொகுப்பில் 4 முதல் 10 எண்ணிக்கையிலான பொம்மைகள் உள்ளன. களிமண்ணில் 6 அங்குலம் முதல் 18 அங்குலம் வரை பொம்மைகள் உள்ளன. இவை ரூ.50-லிருந்து ரூ.1,100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

காகிதக்கூழில் 12 அங்குலம் முதல் 4 அடி வரை பொம்மைகள் தயாரிக்கிறோம். இதனை ரூ.350 முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனை செய்கிறோம். அளவுக்கேற்றவாறு விலை நிர்ணயம் செய்கிறோம். ஆடிப்பெருக்கிலிருந்து புதிய ரக தொகுப்புகளை காட்சிப்படுத்தியுள்ளோம்.கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய வெளிமாநிலங்களிலிருந்தும், அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் ஆன்லைன் மூலம் ஆர்டர்கள் வந்துள்ளன, என்றார்.

x