மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்... அணிவகுத்து நின்று மரியாதை செலுத்திய டாக்டர்கள்!


மரியாதை செலுத்தும் மருத்துவர்கள்

கிருஷ்ணகிரியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கியவரின் உடலுக்கு சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்று அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மரியாதை செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த கோத்தகோட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(40). இவர் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு மூளைச்செயல் இழந்தது தெரியவந்தது.

இதனை உறுதி செய்து கொண்ட மருத்துவக்குழுவினர் அவர்களது உறவினர்களுக்கு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மருத்துவக் குழுவினர் எடுத்து கூறியதைத் தொடர்ந்து கோவிந்தராஜின் உடல் உறுப்புகளைத் தானமாக கொடுக்க அவரது உறவினர்கள் முன் வந்தனர். அதன் அடிப்படையில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினர், உடல் உறுப்புக்களை தானமாக பெற்றனர்.

கோவிந்தராஜ்

தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகளில் இதயம் ஆம்புலன்ஸ் வாகனத்தில் காவல்துறை பாதுகாப்புடன் சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் சிறுநீரகங்களில், ஒன்று சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவை மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

கல்லீரல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இரண்டு கண்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே கண் பார்வை வேண்டி பதிவு செய்தவர்களுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அஞ்சலி செலுத்தும் மருத்துவர்கள்

இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்தவுடன் கோவிந்தராஜன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பிரேத பரிசோதனை கூடம் அருகே மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், உடலுக்கு மலர் மாலை வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை கூடத்தில் இருந்து அமரர் ஊர்திக்கு எடுத்துச் செல்லும் சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு இருபுறமும், அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பயிற்சி மருத்துவ, செவிலிய மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று உடலை வழி அனுப்பி வைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

சிங்கிள் டீ குடிக்கிறதுல இவ்வளவு ஆபத்தா... உயிரை விலை பேசும் ஆய்வு முடிவுகள்!

அவர் என்ன மாமனா... மச்சானா... பிக் பாஸ் வீட்டில் தொடங்கிய முதல் சண்டை

x