ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி... களத்தில் இறங்கிய கல்லூரி மாணவிகள்!


பனை விதை நட்ட மாணவிகள்

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியின் சார்பில் நடைபெறும் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியினை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணிகள் மற்றும் திருச்செந்தூர் பகுதி பனை வாரியம் ஆகியவை இணைந்து தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியினை தொடங்கியுள்ளன.

வீரபாண்டியன் பட்டினம் அருகில் உள்ள ஓடக்கரை கடற்கரை பகுதியில் கல்லூரி முதல்வர் ஜெயந்தி வழிகாட்டுதலில் பனை விதைகள் நடும்பணி இன்று நடைபெற்றது.

அதற்காக கல்லூரி மாணவிகளால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை ஓடக்கரை கடற்கரை பகுதியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் இன்று காலை நடும் பணியைத் தொடங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து இன்று மாணவர்களால் 5000 பனை விதைகள் நடப்பட்டன. இப்பணியில் ஈடுபட்ட பனை வாரிய தனிச்செயலாளர் ஜெபராஜ் டேவிட், பனை விதையின் இன்றியமையாமை குறித்தும், வருங்கால சந்ததியினருக்கு பனை பயன்படும் இடம் குறித்தும் எடுத்துரைத்தார்.

பனை விதைகள்

எல் பாஸ் விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜ் கமல் விதை நடும் முறை குறித்து மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார்.

இதில் காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்துமுகமது, தாசில்தார் வாமனன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் வாசிக்கலாமே...

கடவுளே என்னைத் தேர்ந்தெடுத்துள்ளார்... நடிகை குஷ்பு நெகிழ்ச்சி!

அதிர்ச்சி... 4,000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை!

x