குழந்தைகளுக்கு ‘ஹெபடைடிஸ் பி’ தடுப்பூசி செலுத்த பொது சுகாதாரத் துறை இயக்குநர் அறிவுறுத்தல்


சென்னை: பிறக்கும் குழந்தைகளுக்கு மறக்காமல் ‘ஹெபடைடிஸ் பி’ தடுப்பூசியை ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் என்று தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

உலகக் கல்லீரல் அழற்சி தினம் ஆண்டு தோறும் ஜூலை 28-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. கல்லீரல் அழற்சி நோய்கள் ஹெபடைடிஸ் ஏ, பி, சி, டி, இ என 5 வகைகள் இருந்தாலும், பி மற்றும் சி தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளன. அதில், ஹெபடைட்டிஸ் பி-க்கு தடுப்பூசி உள்ளது. உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி-யால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டு தோறும் சுமார் 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

இதில், ஹெபடைட்டிஸ் பி-க்கு மட்டும் தடுப்பூசி உள்ளது. 2030-க்குள் அந்நோயை ஒழிக்க தேசிய ஹெபிடைடிஸ் பி ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உலகக் கல்லீரல் அழற்சி தினத்தின் இந்த ஆண்டின் கருப்பொருளாக “இது செயல்பாட்டுக்கான நேரம்” என்பது உள்ளது.

இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: உலகக் கல்லீரல் அழற்சி நோய் என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. சுகாதாரத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் கல்லீரல் அழற்சிக்கான ஹெபடைடிஸ் பி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், பிறக்கும் குழந்தைகளுக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது.

குழந்தை பிறந்த 24 மணி நேரத்திலும், 6-வது வாரம், 10-வது வாரம், 14-வது வாரம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பெண்டாவேலண்ட் தடுப்பூசியில் ஹெபடைடிஸ் பி தடுப்பூசியும் சேர்க்கப்பட்டுள்ளது. கல்லீரல் அழற்சி நோய்க்கான முக்கிய அறிகுறியாக மஞ்சள் காமாலை உள்ளது. கல்லீரல் அழற்சி நோயை ஒழிக்க குழந்தைகளுக்கு ஹெபடைடிஸ் பி தடுப்பூசியை செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x