மாநகராட்சி பாலிகிளினிக்குகளில் இன்று 21 இடங்களில் தோல் நோய் சிகிச்சை @ சென்னை


சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் இயக்கப்படும் பாலிகிளினிக்குகளில் இன்று (மே 20) மாலை 21 இடங்களில் தோல் நோய் சிறப்பு மருத்துவர்கள் மூலம் தோல் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 40 இடங்களில் பாலிகிளினிக் மூலம் மாலை நேரங்களில் மாலை 4.30 முதல் இரவு 8.30 மணி வரை பல்துறை சிறப்பு மருத்துவர்களை கொண்டு பல் மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், தோல் சிகிச்சை, மகளிர் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மன நல மருத்துவம் போன்ற சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று ஷெனாய் நகர், திருவொற்றியூர், எம்எம்டிஏ காலனி, மணலி, நங்கநல்லூர், செம்பியம், இளங்கோநகர், வியாசர்பாடி சத்தியமூர்த்திநகர், அயனாவரம், எம்எம்ஏ நகர், நுங்கம்பாக்கம் ஆய்வகம், முகப்பேர் கிழக்கு, கோட்டூர்புரம், மதுரவாயல், செம்மஞ்சேரி, விருகம்பாக்கம், கண்ணகி நகர், ஜாபர்கான்பேட்டை, கொண்டித்தோப்பு ஆகிய இடங்களில் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை, புளியந்தோப்பு காசநோய் சிகிச்சை மையம், ஆகிய 21 இடங்களில் இன்று தோல் நோய் சிறப்பு மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.

மேலும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் மகளிர் மருத்துவம் மற்றும் காது, மூக்கு, தொண்டை மருத்துவ சிகிச்சையும், சாந்தோம் சுகாதார நிலையத்தில் மகளிர் மருத்துவ சிகிச்சையும் மணலி சுகாதார நிலையத்தில் பல் மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படுகிறது.

திருவொற்றியூர், மாதவரம், இளங்கோ நகர், வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், புழல், எம்எம்ஏ நகர், புளியந்தோப்பு காசநோய் சிகிச்சை மையம், ஒரகடம், முகப்பேர் கிழக்கு, அயனாவரம், நெற்குன்றம், ஷெனாய் நகர், தொரைப்பாக்கம், கோட்டூர்புரம், சாந்தோம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, திருவான்மியூர், பாலவாக்கம், எம்எம்டிஏ காலனி, செம்பியம், லட்சுமிபுரம் ஆகிய இடங்களில் இன்று மாலை பொது மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.