சென்னையில் ஜூலை 7-ல் மகளிருக்கான பிரத்யேக கார் பேரணி


பிரதிநிதித்துவப் படம்

சென்னை: சென்னையில் மகளிருக்கான பிரத்யேக கார் பேரணி ஜூலை 7-ம் தேதி நடைபெற உள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் டச்சஸ் கிளப் சார்பில், பெண்கள் பங்கேற்கும் கார் பேரணி சென்னையில் நடத்தப்படும். இந்த ஆண்டு ‘மெட்ராஸ் - மெட்ராஸ்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்தப் பேரணி நடத்தப்பட உள்ளது. அந்த வகையில், சென்னை மயிலாப்பூர் சவேரா ஹோட்டல் வளாகத்தில் வரும் 7-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 23-வது கார் பேரணி நடத்தப்படுகிறது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னை மயிலாப்பூரில் இன்று நடைபெற்றது.

இதில் சவேரா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் நீனா ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: "பெண்கள் கார் ஓட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த கார் பேரணி நடத்தப்படுகிறது. சுமார் 40 கி.மீ. தொலைவு நடைபெறும் இந்தப் கார் பேரணி, சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, மீண்டும் சவேரா ஹோட்டலை வந்தடையும்.

இதில் பங்கேற்க வரும் பெண்கள் மெட்ராஸ் - மெட்ராஸ் என்ற கருப்பொருளின் அடிப்படையில் அதற்கேற்ப வேடங்களை அணிந்து, காரை ஓட்டுவர். இந்தப் பேரணியில் 100-க்கும் மேற்பட்ட கார்களில் போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர். ஒவ்வொரு காரிலும் 4 பேர் இடம் பெறுவர்.

ஒருவர் காரை ஓட்ட, மற்றொருவர் வழிகாட்டுவார். மற்ற இருவரும் சுவாரஸ்யமான விநாடி-வினா போட்டிக்கான விடைகளைத் தேடுவர். குறிப்பாக, கார் வேகம் 30 கி.மீ. தாண்டக்கூடாது. ஜிபிஎஸ் கேமரா செயலி மூலம் இடத்தின் புகைப்படத்தை அனுப்புவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இந்தப் பேரணியில் விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு அதிக குழுக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பேரணியில் 6 பிரிவுகளின் கீழ் பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு பெரும் காருக்கு தேசிய அளவிலான பேரணியில் கலந்து கொள்வதற்கான அனுமதி வழங்கப்படும்." இவ்வாறு நீனா ரெட்டி கூறினார்.