பாரம்பரிய விவசாயத்தை காக்க நெல் திருவிழாக்கள் நடத்த வேண்டும்: நடிகர் சிவகார்த்திகேயன்


திருவாரூர்: பாரம்பரிய விவசாயத்தை பாதுகாக்க நெல் திருவிழாக்கள் ஒவ்வொரு ஊரிலும் நடத்தப்பட வேண்டும் என திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில், மறைந்த நம்மாழ்வார், மறைந்த நெல் ஜெயராமன் ஆகியோரால் முன்னெடுத்து நடத்தப்பட்ட தேசிய நெல் திருவிழா இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடக்க நிகழ்ச்சியாக விவசாயிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருத்துறைப்பூண்டியில் தனியார் மண்டபத்தில் நெல் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் நெல் ஜெயராமனால் மீட்கப்பட்ட 174 பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும், பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டு பாரம்பரிய நெல் விவசாயத்துக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. நெல் திருவிழாவில் பல்வேறு கருத்தரங்கங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நெல் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக திரைப் பட நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். நெல் திருவிழாவில் கலந்து கொள்ள வருகை தந்த அவருக்கு விவசாயிகள் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து மேடைக்குச் சென்ற சிவகார்த்திகேயனுக்கு, மறைந்த நெல் ஜெயராமன் குடும்பத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், "உலகப் புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நெல் ஜெயராமனுக்கு நான் உதவி செய்ததாக கூறினார்கள். அது உதவி அல்ல; என்னுடைய கடமை. அழிந்து போன 174 பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்திருப்பது விவசாயத்தில் ஒரு புரட்சியாகும். இதுபோன்ற பாரம்பரிய நெல் திருவிழாக்கள் அனைத்து ஊர்களிலும் நடத்தப்பட வேண்டும். இத்தகைய நெல் திருவிழா செய்தியை, நான் திரைப்படங்களின் வாயிலாக நிச்சயம் கொண்டு சேர்ப்பேன்” என்றார்.

இந்த விழாவில் சிவகார்த்திகேயனுக்கு விவசாயிகளின் தோழன் என்ற பட்டம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன், “இந்தத் திருவிழா குறித்த செய்தியை வெளி உலகத்துக்கு அனைவரும் கொண்டு சேர்க்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.