இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதி!


தஞ்சையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர்...

தமிழகத்தில் இயற்கை விவசாயத்துக்கும், சிறு தானிய உற்பத்திக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற 2022 - 2023-ம் ஆண்டுக்கான வேளாண் தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் ஆலோசனைகளையும், கருத்துகளையும் தெரிவித்தார்கள்.

இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசின் செயலர் சி. சமயமூர்த்தி, வேளாண் துறை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை இயக்குநர் எஸ்.நடராஜன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் ஆர். பிருந்தாதேவி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்க் கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:

“தமிழகத்தில் கடந்த ஆண்டு 48 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு அது 54 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது. உற்பத்தி அதிகரித்ததால், நெல்லைப் பாதுகாப்பதில் மிகப் பெரிய சவால் உள்ளது. எனவே நெல்லுக்கு மாற்றான மாற்றுப் பயிர் சாகுபடியை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்வதை ஓர் இயக்கமாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா மறுமலர்ச்சி திட்டம் போன்று, தற்போது கலைஞர் வேளாண் மறுமலர்ச்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,997 கிராமங்களில் அனைத்துத் திட்டங்களும் செயல்படுத்தப்படும். 5 ஆண்டுகளில் வேளாண் உற்பத்தியில் இக்கிராமங்கள் முழுமை பெறும். அப்போது தமிழகத்தில் பசுமைப் புரட்சி ஏற்படும்.

இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான விவசாயிகளிடம் ஏற்பட்டு வருகிறது. எனவே வரும் மூன்று ஆண்டுகளில் வேளாண் புரட்சி உருவாக வாய்ப்புள்ளது. அதற்கான நடவடிக்கையைத் தமிழக முதல்வர் எடுத்து வருகிறார். விவசாயிகளின் கருத்துகள் அனைத்தும் வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்தாண்டு முதன்முறையாக வேளாண்மைக்குத் தனி நிதிநிலை உருவாக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றன. அப்போது கருவாக இருந்த வேளாண் நிதி நிலை அறிக்கை, தற்போது 6 மாதக் குழந்தையாக வளர்ந்துள்ளது. இதன் மூலம் 128 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தற்போது நமது மாநிலத்தில் அதிகமாக ரசாயன உரங்களைப் பயன்படுத்தியதால், மண் மலட்டுத்தன்மையாக மாறிவிட்டது. எனவே மண்ணை வளப்படுத்த தனியாகத் திட்டம் கொண்டுவரப்படவுள்ளது. இதற்கு இயற்கை விவசாயத்தையும், தேனீ வளர்ப்பையும் ஊக்குவிக்க உள்ளோம்" என்று அமைச்சர் தெரிவித்தார்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பன்னீர்செல்வம், "வருகிற ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட உள்ளது. நெல் சாகுபடிக்கு இணையாக சிறுதானிய உற்பத்தியை முனைப்பாகக் கொண்டுசெல்லும் வகையில் இத்திட்டம் அறிவிக்கப்பட இருக்கிறது. இயற்கை விவசாயத்துக்கும் இந்த நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் உள்ளடக்கியதாக இருக்கும். தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இதுவரை விவசாயிகளைக் காணொலி மூலம் தொடர்புகொண்டு அவர்களது கருத்துகளைக் கேட்டுள்ளோம். விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் முழுமை அடையும் விதமாக இந்த நிதிநிலை அறிக்கை அமையும்" என்றார்.

x