திருப்பத்தூர்: கி.பி.14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலக்கொடைக் கல்வெட்டு கண்டெடுப்பு


திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே பெருமாபட்டு பகுதியில் கி.பி.14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலக்கொடைக் கல்வெட்டு கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு மற்றும் சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஆய்வுக் குழுவினர் திருப்பத்தூர் அருகிலுள்ள பெருமாபட்டு பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டபோது, கோயில்களுக்கு நிலக்கொடை கொடுத்ததற்கான ஆவணமாக அறியப்படும் கல்வெட்டு ஒன்றை கண்டறிந்தனர். இது கி.பி.14-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும் என ஆய்வுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கல்லூரி பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு, இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தியாளரிடம் கூறியதாவது, "பெருமாபட்டு கிராம நிர்வாக அலுவலர் அறவேந்தன் அளித்த தகவலின் பேரில் எங்கள் ஆய்வுக்குழுவினர் திருப்பத்தூர் அடுத்த பெருமாப்பட்டு ஏரிக்கரையில் சில நாட்களுக்கு முன்பு கள ஆய்வு நடத்தினோம். பெருமாப்பட்டு கிராமத்தில் சந்தப்பன் ஏரியின் மேற்குப் பகுதியின் கரையோரம் குபேந்திரன் என்பவருக்குச் சொந்தமான தனியார் விவசாய நிலத்தில் கல்வெட்டு ஒன்றைக் கண்டறிந்தோம்.

இந்த கல்வெட்டானது 3 அடி உயரமும் 1½ அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லால் அமைந்துள்ளது. கல்வெட்டின் மேற்பகுதியில் திருச்சக்கரம் கோட்டுருவமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இது வைணவ அடையாளமாகும். அதாவது பெருமாளின் கையில் உள்ள சக்கரத்தினைத்தினைக் குறிப்பதாகும். அந்த கல்வெட்டின் கீழ்ப்பகுதியில் 4 வரிகள் எழுதப்பட்டுள்ளன. அதாவது, ‘‘மஞ்சிப்பாடியில் எ(ம்) பெருமானுக்கு விதைக் கண்டகம்.” என்ற செய்தி அந்த கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து கல்வெட்டுச் செய்தி என்ன கூறுகிறது என பார்த்தால், ‘‘பொதுவாக பழங்காலத் தமிழகத்தை ஆட்சி புரிந்த மன்னர்கள், சிற்றரசர்கள், வள்ளல்கள் தங்களது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு நிலங்களைத் தானமாக வழங்குவது மரபு. அவ்வாறு வழங்கும் கொடைகளுக்குச் சான்றாக கல்வெட்டுக்கள், செப்புப் பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் வாயிலாக, எழுத்துப்பூர்வ அதிகாரத் தகவல்களைத் தெரிவிப்பர்.

அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எழுத்துக்களுடன் கூடிய கல்வெட்டுக்கள், செப்புப்பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் பல கண்டறியப்பட்டுள்ளன. நிலக்கொடை தொடர்புடைய கல்வெட்டுகளை, சூலக்கல், வாமனக்கல், பள்ளிச் சந்தம் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்நிலையில், திருப்பத்தூர் வட்டாரத்தில் பழந்தமிழரின் வாழ்வியல் பதிவுகளை விவரிக்கும் எண்ணற்ற தடயங்கள் சமீப காலத்தில் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்த கல்வெட்டானது ஒரு கோயிலுக்கு நிலக்கொடை அளித்த விபரங்களைச் சுருக்கமாகப் பதிவு செய்துள்ளனர். ‘‘கண்டகம்’’ என்பது பழந்தமிழர் கையாணட ஒரு முகத்தல் அளவையாகும். அதாவது 4 படி கொண்டது 1 வள்ளம், 40 வள்ளம் கொண்டது 1 கண்டகம் என்பது அளவை முறைகளாகும். எனவே இந்த கல்வெட்டில் 40 வள்ளம் கொண்ட விதையினை விதைக்கும் அளவிற்கான நிலத்தினைக் கோயிலுக்குக் கொடையாக வழங்கிய செய்தியை இந்த கல்வெட்டு விவரிக்கின்றது. தோராயமாகக் கணக்கிட்டால், 40 ஏக்கர் நிலத்தினைக் கொடையாக வழங்கியிருக்கக்கூடும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ‘விதைக் கண்டகம்’ என்ற அளவீட்டைக் குறிக்கும் முதல் கல்வெட்டு இதுவேயாகும். கல்வெட்டில் மஞ்சிப்பாடியில் எம்பெருமானுக்கு என்று குறிப்பதால் இப்பகுதியில் ‘மஞ்சிப்பாடி’ என்ற பெயர் 600 ஆண்டுகளுக்கு முன்னர் ஏதேனும் ஒரு ஊருக்கு வழங்கியிருக்கக்கூடும் என்பது தெளிவாகிறது. இந்த கல்வெட்டின் எழுத்தமைப்பைக் கொண்டு பார்த்தால் இந்த கல்வெட்டானது கி.பி. 14 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததென தமிழகத்தின் முதுபெரும் அறிஞர்களான முனைவர் ராஜகோபால் மற்றும் முனைவர் சேகர் ஆகியோர் உறுதிப் படுத்தினர்.

இந்த கல்வெட்டு பழந்தமிழரின் அளவை முறைகளை அறிந்துகொள்ளவும் இந்த வட்டார வரலாற்றுப் பின்புலத்தினைப் எடுத்துரைக்கும் சிறப்புக் குரிய ஆவணமாகும். இது போன்ற வரலாற்றுத் தடயங்களைப் பாதுகாக்க தொல்லியல் துறையினரும், மாவட்ட நிர்வாகமும் முன்வர வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாக உள்ளது’’ என்றார்.