உடல் கேலி செய்தவர்களுக்கு காஜல் அகர்வால் பதிலடி!


காஜல் அகர்வால்

கர்ப்ப காலத்தில் தனது உடல் சற்று ஊதியதை கிண்டலடித்த நபர்களுக்கு தக்க விளக்கமும், பதிலடியும் தந்திருக்கிறார் காஜல் அகர்வால்.

தமிழ் மற்றும் தெலுங்கின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் காஜல் அகர்வாலும் இருந்தார். ஒரு வருடத்திற்கு முன்பு இவர் கவுதம் கிச்லு என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு காஜல் அகர்வால் கர்ப்பமாக இருந்ததால், ஒப்பந்தமான படங்களில் இருந்து விலகி இருப்பதாக செய்திகள் வெளியாயின. பின்னர் அந்த செய்தியையும் தனது கர்ப்பத்தையும் உறுதிசெய்து, சமூக வலைதள பக்கம் வாயிலாக காஜல் அகர்வால் அறிவித்தார்.

மேலும் கர்ப்பமாக இருப்பதால் உடல் எடை கூடியிருப்பதான தோற்றம் குறித்தும், இது குறித்து உருவக் கேலி செய்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் தனது சமூக வலைதள பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அதில் காஜல் அகர்வால் தெரிவித்திருப்பதாவது, ‘பல அற்புதமான புதிய மாற்றங்களை எனது வாழ்விலும், உடலிலும், மனதளவிலும், வீட்டிலும் குறிப்பாக என் பணியிடத்திலும் சந்தித்து வருகிறேன். அதோடு கூடுதலாக என் உடல் குறித்தான எனக்கு உதவாத கேலியையும் சந்தித்து வருகிறேன். உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அதை விட்டு விடுங்கள். இது குறித்தான புரிதல்கள் இல்லாதவர்களுக்கும் இதை போன்றே பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களுக்கும் இங்கு என்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கர்ப்ப காலத்தின் போது நம் உடலில் நிறைய மாற்றங்கள் நிகழும். உடல் எடை கூடுவதும் அதில் ஒன்று. ஹார்மோன் மாற்றங்களால், வயிறு தொடங்கி மார்பகம் வரை குழந்தைகாக தாயின் உடல் தயார் ஆகும். நம் முகத்திலும் பருக்கள் வரலாம். அடிக்கடி சோர்வு மற்றும் மனநிலையிலும் மாற்றங்கள் நிகழும். குழந்தை பிறந்த பிறகு, நாம் முன்பு எப்படி இருந்தோமோ அப்படி மாறலாம்; மாறாமல் போனாலும் கவலை இல்லை. இதெல்லாம் இயற்கையாக நடப்பதுதான். இது இயல்புக்கு மாறானது என்று நினைத்து நாம் கவலைப்பட தேவையில்லை. அதிலும் குறிப்பாக குழந்தை என்ற அழகான உலகம் நமக்கு வரும்போது, நம் வாழ்வின் அந்த அழகான தருணத்தில் இதையெல்லாம் நினைத்து மன அழுத்தத்திற்கு ஆளாக தேவையில்லை. குழந்தையின் பிறப்பு நம் வாழ்வின் கொண்டாட்டம். அந்த மகிழ்ச்சியை இந்த எதிர்மறையான கருத்துக்களுக்கு இரையாக்க வேண்டாம். என்னுடைய இந்த பதிவு நிச்சயம் உங்களுக்கு உதவும் என நம்புகிறேன். எல்லாருக்கும் என் அன்பு’ என அந்த விரிவாக பதிவு செய்திருக்கிறார்.

சமந்தா உள்ளிட்ட பல பிரபலங்களும், ரசிகர்களும் காஜலின் இந்த பதிவுக்கு ஆதரவு தெரிவித்து தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

x