நடப்பாண்டில் இதுவரை 5 ஆயிரம் நாய்களுக்கு உரிமம்: சென்னை மாநகராட்சி தகவல்


பிரதிநிதித்துவப் படம்

சென்னை: நாடப்பாண்டில் இதுவரை 5 ஆயிரத்து 25 நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

வீடுகளில் செல்லப் பிராணிகள் வளர்ப்போர் அவற்றுக்கு சென்னை மாநகராட்சியிடம் உரிமம் பெறுவது கட்டாயம். இதன் மூலம் நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு வெறி நோய் தடுப்பூசி போடுவது உறுதி செய்யப்படுகிறது. குடற்புழு நீக்கம் செய்யப்பட்டு, அவற்றின் ஆரோக்கியமும் உறுதி செய்யப்படுகிறது. மாநகராட்சியிடம் உரிமம் பெறாதவர்களிடம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் விளக்கம் கேட்டு, விளக்கம் திருப்தி இல்லாதபட்சத்தில் அபராதம் விதிக்க முடியும்.

கடந்த மே 5ம் தேதி நுங்கம்பாக்கத்தில் வளர்ப்பு நாய்கள் சிறுமியை கடித்து குதறிய விவகாரத்துக்கு பிறகு, செல்லப் பிராணிகள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கான கட்டுப்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. உரிமம் பெறாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை மிகவும் குறைவாக இருப்பதால் குறந்தபட்சம் ரூ.1,000 அபராதம் விதிக்க வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், செல்லப் பிராணிகளுக்கு உரிமம் கோரி ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இதன் மூலம், உரிமம் பெறுவோர் எண்ணிக்கையும், விண்ணப்பிப்போர் எண்ணிக்கையும் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி தலைமை கால்நடை மருத்துவ அலுவலர் கமால் உசேன் கூறியதாவது: “இன்று (ஜூன் 12) காலை நிலவரப்படி 5 ஆயிரத்து 25 நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 1,560 பேர் மட்டுமே உரிமம் பெற்றிருந்தனர்.

மே 5-ம் தேதிக்கு முன்பு வரை இந்த ஆண்டு சுமார் 130 பேர் மட்டுமே உரிமம் பெற்றிருந்தனர். இந்த ஆண்டு சுமார் 10 ஆயிரம் நாய்களுக்கு உரிமம் வழங்க இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம். தற்போது 1,728 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன” என்றார்.