வடிவேலு குணமடைய ஆதரவற்ற குழந்தைகள் பிரார்த்தனை!


அன்பகம் காப்பக குழந்தைகள்

வைகைப் புயல் வடிவேலு கரோனா தொற்றிலிருந்து விரைவில் குணமடைந்து மீண்டு வர வேண்டும் என்பதற்காக சீர்காழியில் அன்பாலயம் காப்பகத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் பிரார்த்தனை செய்தனர்.

மயிலாடுதுறையில் உள்ள பிரபல தனியார் விடுதி ஒன்றின் உரிமையாளரும், நடிகர் வடிவேலுவும் மிக நெருங்கிய நண்பர்கள். இந்த நட்பின் காரணமாக அந்த தனியார் விடுதியை வடிவேலுவே நேரில் வந்து திறந்து வைத்தார். தற்போது வடிவேலுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவர் விரைந்து குணம் அடைய வேண்டும் என்பதற்காக அந்த தனியார் விடுதியின் சார்பில் சீர்காழியில் உள்ள அன்பாலயம் ஆதரவற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள் இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு இன்று (டிசம்பர் 27) மூன்று வேளையும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனையொட்டி இன்று காலை நடந்த சிறப்பு பிரார்த்தனையில் அந்த குழந்தைகள் அனைவரும் இறைவனைப் பாடி, தொழுது, வடிவேலு விரைந்து நலம்பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர் . இந்த சிறப்பு பிரார்த்தனையில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் மற்றும் அதன் ஆசிரியர்கள் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

x