விசாகா வழிகாட்டுதலின் பேரில் உள் புகார் குழு!


(இடமிருந்து வலம்) வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் தாசரதி, தலைவர் முரளி குமார், ஆலோசகர் தம்பி பார்த்தசாரதி, டி.ஏ. குமார், நிறுவனத் தலைவர் எஸ்வி சேகர், உபதலைவர் மயிலை குமார்.

தமிழ்த் திரை உலக சங்கங்களின் வரலாற்றிலேயே முதன்முறையாக, பெண்களின் பணியிடப் பாதுகாப்புக்கான உள் புகார் குழுவை (Internal Complaints Committee) தமிழ்நாடு வெள்ளித் திரை மற்றும் சின்னத் திரை வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட்ஸ் யூனியன் அமைத்திருக்கிறது. பெண்களின் பணியிடப் பாதுகாப்புக்கான இந்தக் குழு, உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்த விசாகா வழிகாட்டுதலின் பேரில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சங்கத்தின் 7-ம் ஆண்டு பேரவைக் கூட்டம் இன்று (டிச.5) நடந்தது. இதில் திருத்தப்பட்ட சங்க விதிகள் புத்தகத்தை சங்கத்தின் நிறுவனத் தலைவர் எஸ்.வி.சேகர் வெளியிட, சவுகீத் டப்பிங் ஸ்டூடியோ டி.ஏ.குமார் பெற்றுக்கொண்டார்.

இந்தக் கூட்டத்தின் சிறப்பம்சமாக, உள் புகார் குழு (ஐசிசி) அறிமுகம் செய்யப்பட்டது. பெண் உறுப்பினர்கள் அச்சமின்றி பணியாற்ற முழுமையான முகாந்திரம் அமைத்துத் தரும் இந்தக் குழுவின் நிர்வாகிகளாக, சின்மயி ஸ்ரீபாதா, சித்த மருத்துவர் மகேஸ்வரி, வழக்கறிஞர் சித்ரா, மூத்த வழக்கறிஞர் மீனாட்சி முருகன், பின்னணிக் குரல் கலைஞர் முரளி குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். எந்தவித சங்க நிர்வாகத் தலையீடும் இன்றி இவர்கள் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய எஸ்.வி.சேகரும், சங்கத் தலைவர் முரளி குமாரும், 300-க்கும் அதிகமாக உறுப்பினர்களை சங்கத்தில் இணைக்கும் திட்டம் இல்லை எனவும், தகுதி வாய்ந்த, உண்மையில் திறமைசாலிகளான பின்னணிக் குரல் கலைஞர்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டு இந்தச் சங்கம் செயல்படும் எனவும் அறிவித்தனர்.

x