‘ஏர் இந்தியா’வின் மனிதாபிமானம்: நடுவானில் காப்பாற்றப்பட்ட தாயும் சேயும்!


கர்ப்பிணி நிதா அருகில் விமான கேப்டன் ஷோமா சர் மற்றும் நரங்க்

ஏர் இந்தியாவின் மகாராஜா 787 எண் விமானத்துக்குள் நேற்று (அக்.5), குறைப்பிரசவமானாலும் சுகப்பிரசவமாகப் பிறந்தது ஒரு குழந்தை. விமானப் பணியாளர்கள் மற்றும் பயணிகளின் பேருதவியால் தாயும் சேயும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

3 மணி நேரத்துக்குள் பிரசவம் பார்த்தாக வேண்டிய கட்டாயம். விமானத்துக்குள் இருந்த தலையணைகளும் கம்பளிகளும் பாந்தமாக அடுக்கப்பட்டு விமானத்தின் சமையலறை மருத்துவ சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது. ஆனால், 7 மாதங்களேயான கர்ப்பிணிக்கு குறைப்பிரசவம் நடப்பது என்பது ஆபத்து நிறைந்தது.

தாய், சேய் இருவரையும் பத்திரமாக மீட்ட ஏர் இந்தியா விமான கேபின் குழுவினர்

இந்தியாவைச் சேர்ந்த நிதா லண்டனில் கணவருடன் வசித்துவருகிறார். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியான நிதா, லண்டனில் இருந்து கொச்சி வர முடிவெடுத்தார். ஏர் இந்தியா விமானத்தில் நேற்று (அக்.5) இந்திய நேரப்படி மாலை 6:50-க்கு கணவருடன் ஏறினார்.

அடர்ந்த மேகங்கள் நிறைந்த வானில் காற்றைக் கிழித்துக் கொண்டு விமானம் புறப்பட்டது. பல்கேரியா நாட்டில் கருங்கடலுக்கு மேல் பறந்து கொண்டிருக்கையில், விமானத்தில் அமைதியாக அமர்ந்திருந்த அனைவரும் உணவு அருந்தி முடித்திருந்தார்கள்.

நிதாவுக்கு திடீரென அடி வயிற்றில் வலி உண்டானது. விமானத்துக்குள் ஏற்பட்ட காற்றுக் கொந்தளிப்பு அவர் கருவிலிருந்த சிசுவை வெளியே உந்தித்தள்ளியது. இதைச் சுதாரித்த நிதா, தனக்குப் பிரசவ வலி ஏற்பட்டதை விமானப் பணிப் பெண்களிடம் தெரியப்படுத்தினார். அதிர்ஷ்டவசமாக 210 பயணிகளில் 4 செவிலியர்கள், 2 மருத்துவர்கள் இருந்தனர்.

நிதாவை சோதனை செய்த மருத்துவர்கள், அடுத்த 2-லிருந்து 3 மணி நேரத்துக்குள் பிரசவம் பார்த்தாக வேண்டிய கட்டாயத்தைத் தெரிவித்தனர். விமானத்துக்குள் இருந்த தலையணைகளும் கம்பளிகளும் பாந்தமாக அடுக்கப்பட்டு விமானத்தின் சமையலறை மருத்துவ சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது. ஆனால், 7 மாதங்களேயான கர்ப்பிணிக்கு குறைப்பிரசவம் நடப்பது என்பது ஆபத்து நிறைந்தது. இந்நிலையில், விமானத்தில் முதலுதவிக்காக வைக்கப்பட்டிருந்த மருந்துப் பொருட்களை, மருத்துவ உபகரணங்களைக் கொண்டு தாயையும் சேயையும் விமானத்தில் பயணித்த மருத்துவர்களும் செவிலியர்களும் பத்திரமாக மீட்டனர். குறைப்பிரவசமானாலும் சுகப்பிரசவம் நிகழ்ந்தது. இருப்பினும் அடுத்த 3 மணி நேரத்துக்குள் விமானத்தை தரையிறக்கியாக வேண்டும் என்றனர்.

அப்போதே இரவு 9 மணி ஆகிவிட்டிருந்தது. விமானத்தின் பெண் கேப்டன் ஷோமா சர் மற்றும் நரங்க் அவசரகதியில் முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். விமானத்தைத் திசை மாற்றி 2 மணிநேரத்தில் அடையக்கூடிய பிராங்பர்ட் விமானநிலையத்தில் விமானத்தை தரையிறக்க முடிவெடுத்தனர். பறக்கும் விமானத்திலிருந்து செயற்கைக்கோள் வழியாக சாட்காம் சேவையைப் பயன்படுத்தி, தகவலைத் தரைதளத்துக்குத் தெரிவித்தனர். விமானம் பிராங்க்பரட் வந்தடைவதற்குள் மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கணவர், சிசுவுடன் ஆசுவாசமாக தாய் நிதா

நள்ளிரவு 11 மணிக்கு, பிராங்க்பர்ட் விமானநிலையத்தில் விமானம் தரையிறங்கியது. துணை மருத்துவர்கள் விரைந்து வந்து தாய், சேய் மற்றும் பெண்ணின் கணவரை பத்திரமாக மருத்துவமனைக்கு டாக்சியில் அழைத்துச் சென்றனர். பிறகு விமானம் புறப்பட்டு கொச்சியை நோக்கிப் பறந்தது.

’மனிதாபிமானமிக்க விமான சேவை ஏர் இந்தியாவினுடையது’ என்பது, இதன் மூலம் மீண்டும் உலகுக்கு நிரூபிக்கப்பட்டிருப்பதாகப் பலர் நெகிழ்ந்து பாராட்டியுள்ளனர்.

x