விவசாய தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை: பழநியில் ‘விதை உருளை’ மூலம் நடவு பணி


பழநி அருகே கோதை மங்கலத்தில் விதை உருளை மூலம் நெல் நடவு பணியில் ஈடுபட்ட விவசாயி.

பழநி: விவசாயத் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பழநி பகுதியில் விதை உருளையை பயன்படுத்தி நெல் நடவு பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

பழநி, பாலசமுத்திரம், அ.கலையம்புத்தூர், காரமடை, கோதைமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 5,000 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த மாதம் பாலசமுத்திரம், கோதைமங்கலம், மானூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடை நடந்து முடிந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பழநி பகுதியில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் அறுவடை முடிந்த கையோடு நிலத்தை உழுது நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை நடவு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

நடவு பணி, களை எடுத்தல், மருந்து தெளித்தல் உள்ளிட்ட விவசாயப் பணிகளுக்கான தொழிலாளர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை கூலியாக கொடுக்க தயாராக உள்ள நிலையிலும், பழநி பகுதியில் விவசாயப் பணிக்கு தொழிலாளர் பற்றாக்குறை நீடிக்கிறது.

தொழிலாளர்கள் பற்றாக்குறை மற்றும் இயந்திர நெல் நடவுக்கு செலவு அதிகம் என்பதால் கோதைமங்கலம் பகுதியில் விவசாயிகளே பிரத்யேக ‘விதை உருளை’ மூலம் நெல் நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல் நாற்று நடுவதற்கு பதிலாக முளை கட்டிய நெல் விதைகளை இந்த கருவியில் உள்ள 4 உருளை வடிவப் பெட்டிகளில் நிரப்பி அதன் மூலம் நடவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ஒரு ஏக்கருக்கு இயந்திரம் மூலம் நடவு செய்ய ரூ.6,000 வரை செலவு ஆகும். விவசாயத் தொழிலாளர்களாக இருந்தால் குறைந்தது 4 பேர் தேவை. ஒரு நபருக்கு ரூ.600 வரை கூலி கொடுக்க வேண்டும். தொழிலாளர்கள் மூலம் நடவு செய்ய அதிக நேரம் தேவைப்படும்.

இதை தவிர்க்க, அரசு வேளாண் பொறியியல் துறை மற்றும் தனியாரிடம் விதை உருளை எனும் நெல் நடவு கருவி வாடகைக்கு கிடைக்கிறது. ஒரு நாளைக்கு ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை வாடகை கேட்கின்றனர். விவசாயிகளே அந்த கருவியில் முளை கட்டிய நெல்லை நிரப்பி நிலத்தில் நடவு செய்யலாம்.

இந்தக் கருவியை பயன்படுத்த ஒரு நபர் போதும். கருவியில் பொருத்தப்பட்டிருக்கும் உருளைகளில் உள்ள துளைகள் வழியாக நெல் வயலில் விழும். இதன் மூலம் சீரான மற்றும் வரிசையாக நெல் நடவு செய்ய முடியும். ஒரு நாளில் குறைந்தது 3 ஏக்கர் வரை இந்தக் கருவி மூலம் நடவு செய்யலாம். தொழிலாளர்களை பயன்படுத்த வேண்டியதில்லை. நடவு பணி செலவு மிச்சமாகும் என்று கூறினர்.