காப்பீடும் செய்யல... கொள்முதலும் நடக்கல!


வயலில் சாய்ந்து கிடக்கும் விளைச்சல்

தமிழகத்தில் கோடையில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெல்ரகங்கள் தற்போது அறுவடை செய்யப்படும் நிலையில் இருக்கிறது. ஆனால், வெப்பச்சலனத்தால் பெய்துவரும் பெருமழை விவசாயிகளின் நிம்மதியை கெடுத்துவருகிறது. மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் விளைச்சல் வயலில் சாய்ந்து கிடக்கின்றன. கிடக்கும் மழைநீரில் அவை மூழ்கிக் கிடக்கின்றன. இதனால் அறுவடை செய்யமுடியாமல் விவசாயிகள் வேதனையில் இருக்கிறார்கள். அறுவடை செய்யும் இடங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் அந்த நெல்லை விற்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

பல இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் இருக்கிறது என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் குற்றம் சாட்டியுள்ள நிலையில் காவிரி டெல்டா பகுதியில் பல இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. திறக்கப்பட்ட இடங்களிலும் ஈரப்பதத்தை காரணம் காட்டி நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. இந்நிலையில் டெல்டாவின் நிலவரம் குறித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் இன்று வெளியிட்ட அறிக்கையில்,

‘எனது நிலங்களில் சென்ற வாரமே அறுவடைக்கு தயாராக இருந்தபோதும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் அறுவடை செய்ய முடியாமல் தற்போது பெய்து வரும் மழையால் அனைத்து கதிர்களும் சாய்ந்து அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதை பார்த்து மனம் பதபதைக்கிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டால் தான் அறுவடையே துவங்க முடியும் என்பதை அரசு உணர வேண்டும்.

திருவாரூர் மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்கள் வாய்க்கால், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் அருகில் அமைந்திருப்பதால் அவற்றை திறக்க முடியவில்லை என்று நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் சொல்கிறார்கள். ஏற்கெனவே திறக்கப்பட்ட கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதத்தையும் மழை பெய்வதையும் காரணங்காட்டி கொள்முதல் செய்யாமல் தட்டிக் கழிக்கிறார்கள். இதனால் விவசாயிகள் மிகப்பெரிய பேரழிவைச் சந்தித்து வருகிறார்கள்.

தனது வயலில் பி.ஆர்.பாண்டியன்

முன்கூட்டியே திட்டமிட்டு 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பெற முடியாவிட்டால் கடந்த கால நடைமுறைகளைப் பின்பற்றி தமிழக அரசு ஈரப்பதத்திற்கு தானே பொறுப்பேற்று பின் அனுமதி பெற்றுக் கொள்வதற்கான உத்தரவாதத்தை கொடுத்து கொள்முதல் செய்திட வேண்டும். இதற்கு மத்திய அரசை காரணம் காட்டுவது பொறுப்பற்ற செயலாகும்.

குறுவை காப்பீடும் செய்ய முடியவில்லை விளைந்த கதிர்களை அறுவடை செய்யவும் முடியவில்லை, கொள்முதலும் மறுக்கப்படுவதால் ஒட்டுமொத்த காவிரி டெல்டா விவசாயிகள் செய்வதறியாது பரிதவிக்கிறார்கள். ஆகவே, தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து அக்டோபர் 15-ம் தேதிக்குள் அனைத்து நெல்லையும் நிபந்தனையின்றி கொள்முதல் செய்வதற்கு தேவையான அவசர கால நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிமாநில நெல் வருவதை தடுக்கின்ற பொறுப்பும் தமிழக அரசுக்கு இருக்கிறது என்பதை உணரவேண்டும்.

கொள்முதல் தடையின்றி நடைபெற அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட உயர்மட்டக்குழுவை உடனடியாக காவிரி டெல்டாவிற்கு அனுப்பிவைத்து விவசாயிகள், கொள்முதல் அலுவலர்கள் கொண்ட கலந்துரையாடல் கூட்டங்ளை நடத்தவேண்டும். அதன்மூலம், பாதிப்பை உணர்ந்து போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் நேரடி பார்வையில் துவங்கிட வேண்டும். இல்லையேல் விவசாயிகள் அழிவதைத் தவிர வேறு வழியில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

x