தமிழை திராவிடமாக திரிப்பதை கைவிடுங்கள்...


பெ.மணியரசன்

சங்கத் தமிழ் இலக்கியங்களை சந்தி பிரித்து, எளிய தொகுப்பாக வெளியிடப்போவதாகவும், அந்த சங்கத் தமிழ் தொகுப்புக்கு ’திராவிடக் களஞ்சியம்’ என்று பெயர் சூட்டப்போவதாகவும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருக்கிறார். அதற்கு, 'திராவிடக் களஞ்சியம்' என்ற பெயரை வைக்கக்கூடாது என்று எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

தமிழ்த்தேசிய பேரியக்கம் சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன அறிக்கை வெளியாகியிருக்கிறது. அதில், “சங்கத் தமிழ் நூல்கள் எதிலும் ’திராவிட’ என்ற சொல்லே கிடையாது. தமிழ், தமிழ்நாடு, தமிழகம் என்ற சொற்களே இருக்கின்றன. வரலாற்று உண்மை இவ்வாறிருக்க, வலிந்து சங்கத் தமிழ் நூல்களுக்கு 'திராவிடக் களஞ்சியம்' என்று தி.மு.க. ஆட்சி பெயர் சூட்டுவதற்கு, ஏதோ ஓர் உள்நோக்கம் இருக்க வேண்டும்.

எது எப்படி இருப்பினும், சங்கத் தமிழ் நூல்களைத் 'திராவிடக் களஞ்சியம்' என்று மக்களிடம் அறிமுகப்படுத்துவது தமிழ் மொழி, தமிழினம் இரண்டையும் மறைக்கும் செயலாகும். முதலமைச்சர் ஸ்டாலின், அண்மைக்காலமாக தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற இயற்கையான சொற்களுக்கு மாற்றாக 'திராவிட' என்ற வடசொல்லைப் புகுத்தி வருகிறார்.

தமிழ்நாட்டு வளர்ச்சியைக் குறிப்பதற்குக் கூட அவர் 'திராவிட மாடல்' என்று பெயர் சூட்டினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு அண்மையில் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தபோது, 'திராவிடச் சிறுத்தை' என்று சிறப்புப் பெயரை முதல்வர் சூட்டியதையும் இங்கு நினைவு கொள்ள வேண்டும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தோழர்கள் அவரை 'எழுச்சித் தமிழர்' என்று அழைக்கிறார்கள். அதை 'திராவிடச் சிறுத்தை' என்று மாற்றுகிறார் ஸ்டாலின்.

அண்மையில் நடந்த சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் பரப்புரையில், தமிழர் என்ற சொல்லையே அதிகம் பயன்படுத்தினார் ஸ்டாலின். முதலமைச்சராக பதவியேற்றவுடன் ’நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்’ என்று அறிவித்துக் கொண்டார். தமிழர்களிடம் வாக்கு வாங்கும்வரை அவர்களின் அசல் இனப்பெயரைச் சொல்லுவது, வாக்கு வாங்கி வெற்றி பெற்றபின் ’திராவிடத்தை’ திணிப்பது என்ற தந்திரமாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது.

தமிழ் இன உணர்வும், தமிழ்த்தேசியமும் வளர்ந்து வரும் இக்காலத்தில், தமிழ் – தமிழினப் பெருமிதங்களை ’திராவிட மாயை’யில் மறைக்கும் செயலை இனிமேலாவது தி.மு.க. கைவிட்டால் நல்லது. திராவிட முன்னேற்றக் கழகத்திலுள்ள தமிழறிஞர்களும், இன உணர்ச்சியுள்ள தமிழர்களும் தங்கள் தலைமைக்கு இதையெல்லாம் சுட்டிக்காட்டி, தமிழை திராவிடமாகத் திரிக்கும் வேலையை கைவிடச் செய்ய வேண்டும்.

தமிழர்களின் இந்த வேண்டுகோளைப் புறக்கணித்து, சங்கத் தமிழ் நூல்களை பிடிவாதமாக ‘திராவிடக் களஞ்சியம்’ என்ற பெயரில் வெளியிட்டால், அதற்கு எதிராக தமிழர்கள் கருத்தைத் திரட்டி அறவழிப் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்பதைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர் மணியரசன் தெரிவித்துள்ளார்.

x