வங்கக்கடல் தந்த கொடைதான் சென்னை


தனது ஆய்வுகளுக்காக தங்கம் தென்னரசுவிடம் பாராட்டு பெறும் சிங்கநெஞ்சம் சம்பந்தம்

இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க :

இன்று சென்னையாக இருக்கும் பகுதிகள் அனைத்தும் பண்டைக்காலத்தில் கடலாக இருந்தவையே. கடல் உள்வாங்கியதன் மூலம் இன்றைய நிலப்பரப்பு கிடைத்திருக்கிறது என்பதை தனது பல்வேறு ஆய்வுகளின் மூலமும், இலக்கியம், ஆய்வுகள், மேற்கோள்கள் ஆகியவற்றின் ஒப்பீடுகள் மூலமும் அழுத்தம் திருத்தமாக எடுத்து வைத்திருக்கிறார் புவிசார் ஆய்வாளர் சிங்கநெஞ்சம் சம்பந்தம்.

புவிசார் ஆய்வாளர் சிங்கநெஞ்சம் சம்பந்தம். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பயின்றவர். மத்திய அரசின் புவியியல் ஆய்வுத் துறையில் இயக்குனராக பணிபுரிந்தவர். நம்முடைய இலக்கியம் காட்டும் தமிழ் மண்ணின் நிலப்பரப்புக்கள், கடல்கோள்கள், குமரிக்கண்டம், நகரங்கள் என அனைத்தையும் பல ஆண்டுகள் கள ஆய்வு செய்து, மிகத்தீவிரமாக ஒப்பீடுகள் செய்து, அதுகுறித்த கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் மறுக்க முடியாத அளவுக்கு சான்றுகளையும், ஆதாரங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.

கடந்த 2019-ம் ஆண்டில் எதிர்பாராதவிதமாக அவர் மரணமடைந்தது வரலாற்று ஆய்வாளர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவு என்றே சொல்லலாம். 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது முகநூல் பக்கத்தில் ’வங்கக்கடல் தந்த கொடைதான் சென்னை’ என்று சென்னை குறித்து அவர் எழுதியிருந்த பதிவு இது..

சிங்கநெஞ்சம் சம்பந்தம்

வங்கக் கடல் தந்த கொடை சென்னை - Singanenjam Sambandam

சில ஆண்டுகளுக்கு முன் திருமயிலையில் கபாலீஸ்வரர் திருக்கோயில் சென்றேன். அங்கு திருஞானசம்பந்தர் பாடிய பூம்பாவை பதிகம் கல்வெட்டில் படித்தேன். முதல் பதிகத்தின் முதல் வரி,

“மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்

கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்”

இதில் வரும் கானல் எனும் சொல்லிற்கு “கடற்கரை சோலை” என்பதே பொருள். (சிலம்பில் வரும் “கானல் வரிகளை” நினைவு கூர்க). மயிலைக் கோவிலுக்கு அருகே கடற்கரை சோலைகள் ; ஆஹா.


அடுத்து மூன்றாம் பதிகத்தில் முதல் வரி

“ஊர்திரை வேலை உலாவும் உயர் மயிலைக்”

ஊர்ந்து வரும் அலைகள் உலா செய்கின்ற மயிலை. அருமை.


சரி, போதும். கபாலியை விட்டு சாரதியிடம் போகலாம் என்று தேவாரத்தை விட்டு விட்டு ஆழ்வார்கள் பக்கம் சென்று திவ்ய பிரபந்தம் படித்தேன். திருமழிசை ஆழ்வாரின் பாசுரம் கண்ணில்பட்டது.


“வந்துதைத்த வெண் திரைகள் செம்பவள வெண்முத்தம்

அந்தி விளக்கும் அணி விளக்காம் –எந்தை

ஒருவல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்பன்

திருவல்லிக்கேணியான் சென்று “

‘நீளோதம் வந்தலைக்கும் மா மயிலை மா

அல்லிக் கேணியான்’

என்கிறார் திருமழிசை ஆழ்வார்.

உயர் ஓததின்போது அலைகள் மயிலையிலும் திருவல்லிகேணியிலும் அலைகள் வந்து சென்றனவாம் , அவை முத்தும் பவழமும் கொண்டு வந்து சேர்த்தனவாம் .

இந்த தேவார , திவ்யப் பிரபந்த வரிகளை பார்க்கும் போது மயிலாப்பூரும் திருஅல்லிக்கேணியும் சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன் கடற்கரைக்கு வெகு அருகாமையில் இருந்திருக்கும் என்று தோன்றுகிறதே. இன்றைக்கு மயிலையும் திருவல்லிக்கேணியும் கடற்கரையிலிருந்து முறையே 1.4 கி.மீ மற்றும் 1 கி.மீ தூரத்தில் உள்ளன. அப்படியென்றால் கடந்த 1,200 ஆண்டுகளில் கடல் ஒன்று முதல் ஒன்றரை கி.மீ பின் வாங்கியுள்ளதா?

ஆம் என்றே சொல்லத் தொன்றுகிறது.

நினைவுகள் பின்னோக்கி சென்றன.

நாற்பது ஆண்டுகளுக்கு முன் இளநிலை ஆய்வாளர் பணி தொடர்பாக கிண்டி பொறியியற் கல்லூரிக்கு (இன்றைய அண்ணா பல்கலைக்கழகம்) சென்றேன். அங்கே வடங்களை பதிப்பதற்காக அகழப்பட்ட நீள் குழிகளில் கருப்பு நிற களிமண் இருந்தது. அதில் வெண்மை நிறத்தில் புள்ளி புள்ளியாக ஏதோ இருந்தது. எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே வந்த புவியியல் அறிஞர் ஆரோகியசாமி, “ இவை கிளிஞ்சல் துண்டுகள். பல ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே கடல் இருந்தது என்பதற்கு இது அடையாளம்” என்றார். மலைத்துப் போய்விட்டேன்.

அப்போது நான் இந்திய புவியியல் ஆய்வுத் துறையிலிருந்து பணி ஆணைக்குக் காத்திருந்தேன். என்ன, அப்படியானால் கடல் இந்தப் பகுதியில் சில கி.மீ பின் வாங்கிவிட்டதா, இதெல்லாம் எப்போது நடந்திருக்கும் போன்ற பல கேள்விகள் என்னைக் குடைய ஆரம்பித்துவிட்டன.

ஆண்டுகள் உருண்டோடின. வடநாட்டில் சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு சென்னைக்கு வந்ததும், கனவில் கடல் வந்தது. நாம் மேலே சொன்ன கடல் பின்வாங்கிய கதைகளை நிரூபிக்க வேண்டுமெனில், புராணம் படித்தால் போதாது. புவியியல் படிக்க வேண்டும்என எண்ணி GSI-ன் நினைவேடுகளை (MEMOIRS) புரட்டினேன். 1870-களில் ROBERT BRUCE FOOTE அவர்கள் இந்தப்பகுதியில் தான் செய்த பணியைப் பற்றி எழுதியுள்ள அறிக்கை அந்த நினைவேடுகளில் இருந்தது. அந்த அறிக்கையில் உள்ள சில செய்திகளை கீழே தருகிறேன்.


“சென்னைக்கும் சதுரங்கப் பட்டினத்திற்கும் (SADRAS) இடையே உள்ள கடற்கரை பகுதி, அண்மைக்காலத்தில் உயர்ந்திருக்கிறது”.

“சென்னையின் பல பகுதிகளில் தோண்டப்பட்ட கிணறுகளில் உள்ள படிவப்படுகைகளில் கடல் சிப்பிகள்காணப்படுகின்றன.”

“1819-ம் ஆண்டு லண்டன் ஜியலாஜிகல் சொசைட்டியில் வாசித்த அறிக்கையில், பாபிங்க்டன் எனும் அறிஞர், சென்னை பகுதியில் உள்ள கரிய நிற களிமண்ணில் கடற் சிப்பிகள் கிடைக்கின்றன, ஆதலின் இந்தப் பகுதியில் ஒரு காலத்தில் கடல் இருந்திருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார்.”

“1832-ம் ஆண்டு, கடற்கரையிலிருந்து ஒரு கி.மீ மேற்கேயுள்ள LAND CUSTOM HOUSE-ல் தோண்டப்பட்ட இரு கிணறுகளில் 13 அடி ஆழத்திலும் 16 அடி ஆழத்திலும் கிடைத்த களிமண்ணில் கடற்சிப்பிகள் காணப்பட்டன.”

“கடந்த நூற்றாண்டுகளில் மைலாப்பூர் டேங்க் என்றும் லாங் டேங்க் என்றும் அழைக்கப்பட்ட பெரிய ஏரியின் கிழக்குக் கரையிலும், மௌபரீஸ் சாலைப் பகுதியில் அகழப்பட்ட கிணற்றிலும் கடல் சிப்பிகள் கண்டறியப்பட்டன.”

“அடுத்து, கடற்கரைக்கு மூன்று கி.மீ மேற்கேயிருந்த ‘கர்னல் மார்ஷல்’ அவர்களின் தோட்டத்தில் கிணறு தோண்டியபோது 5 அடி ஆழத்திலேயே கடற் சிப்பிகள் தென்பட்டன”.

“தொடர்ந்து, திருமயிலை தெப்பக்குளம், செனோடாப் சாலையில் (இன்றைய டி.டி.கே. சாலை) இருந்த Mr. ‘Ainsle’ யின் இல்லம், மௌபரிஸ் சாலை இங்கெல்லாம் வெட்டப்பட்ட கிணறுகளிலும் நிறைய கடற்சிப்பிகள் கிடைத்தன. “

“BRODIE’S ROAD-ல் உள்ள PAGODA TANK-லிருந்து ஒன்றரை மைல் தெற்கே உள்ள கிணற்றிலும் (இங்கே BRODIE’S ROAD எனக் குறிப்பிடப்படுவது இன்றைய இராமகிருஷ்ண மடம் சாலை; PAGODA TANK என்பது மயிலை தெப்பக்குளம்).

மத்தியகைலாஷ், மன்றோ பாலம் இங்கெல்லாம் வெட்டப்பட்ட கிணறுகளிலும் கடற்சிப்பிகள் கிடைத்துள்ளன.

இப்படி வரிசையாக அடுக்கிக்கொண்டே போகும் இராபர்ட் ப்ருஸ் ஃபுட் , இன்றைய கடற்கரைக்கு மேற்கே எத்தனைக் கி.மீ தூரம் வரை கடல் முன்னேறியிருந்தது என சொல்வதற்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்கிறார். கடல் சிப்பிகளின் மிச்சங்களைத் தாங்கிய இந்தப் படிவங்கள் உருவானபோது கடல் கிட்டத்தட்ட பல்லாவரம் மலையின் கிழக்கு அடிவாரம் வரை இருந்திருக்கக்கூடும் எனக் கருதும் இவர், இன்றைய (கிழக்கு) சென்னை அமைந்துள்ள இடம் , “வங்கக் கடல் தந்த கொடை” என்று பதிவு செய்திருக்கிறார்,

இது இப்படியிருக்க 1950-களில் , விருகம்பாக்கம் பகுதியில் வாயு கசிவு ஏற்பட்ட ஒரு கிணற்றை ஆய்வு செய்த இந்திய புவியியல் துறை விஞ்ஞானி ஜேகப் குரியன் , அது மீதேன் வாயு என்றும் விருகம்பாக்கம் - வடபழனி பகுதி முன்பு கடலை ஒட்டிய சதுப்பு நிலப் பகுதியாக இருந்திருக்கக் கூடும் என்றும் அறிக்கை அளித்துள்ளார்.

இந்நிலையில் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் சென்னையில் இந்திரா நகர், மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் குடிநீருக்காக தோண்டப்பட்ட குழாய்க் கிணறுகளிலும் கடல் களிமண் வெளிப்பட்டதை பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இன்றைக்கு மயிலை மியூசிக் அகடெமிக்கு எதிரே உயர்ந்து நிற்கும் கட்டிடத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன் அஸ்திவாரம் போடும்போது இறங்கிப்போய் பார்த்தேன். களிமண்ணும் மணலும் கலந்திருந்த குழியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உடைந்த சிப்பித் துண்டுகள் கிடந்தன.


தேனாம்பேட்டை சிக்னல் அருகேயுள்ள ஆலையம்மன் கோவிலின் சரியான பெயர் “அலை காத்த அம்மன் கோவில்” என அறிந்து, அங்கு சென்று விசாரித்தேன். முற்காலத்தில் அங்கே ஒரு பெரிய ஏரி இருந்தது; அந்த ஏரியின் அலைகளில் மிதந்து வந்த அம்மன் சிலைதான் இங்கு வழிபடப்பட்டு வருகிறது என்று சொன்னார்கள். ஒரு முதியவர், “ சார், முந்தி கடல் இங்க இருந்திச்சாம் , ஒருதடவ அலையெல்லாம்பொங்கி கிராமத்துக்குள்ள வரப்ப இந்த அம்மாதான் ஊர காப்பாத்திச்சாம், அதனாலதான் இந்த சாமிக்கு “அலை காத்த அம்மன்’ னு பேரு என்றார். ஆனால் இவற்றை முழுமையாக நம்புவதற்கில்லை.

அண்மையில் சென்னை அருங்காட்சியகத்தில் ROBERT BRUCE FOOTE பற்றிய ஆவணப் படவெளியீட்டு விழாவில் பங்கேற்ற என் நண்பர் திரு ஸ்ரீநிவாசன் ( DEPUTY DIRECTOR GENERAL ( RETIRED,) GSI), (இவர் சென்னையின் பல இடங்களில் துரப்பண பணி செய்தவர்) அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, தியாகராய நகர் பகுதியில் MARINE SAND மற்றும் வடபழனி பகுதியில் MAERINE CLAY கிடைத்ததாகத் தெரிவித்தார்.


அண்மையில் சென்னைப் பகுதியின் பழைய வரைபடம் ஒன்றைப் பார்த்தேன் (1794-ம் ஆண்டு வெளியிடப்பட்டது). அதில் அந்நாளில் இன்றைக்கு அண்ணா பல்கலைக்கழகம் உள்ள பகுதியிலும் அதற்குக் கிழக்கேயும் ஏரி ஒன்று இருப்பது தெரியவந்தது. வடக்கு- தெற்காக இருந்த அந்த ஏரியின் அமைப்பு, அது கடல் பின் வாங்கியபோது விட்டுச் செல்லப்பட்ட நீர்ப் பகுதியோ என எண்ணத் தூண்டியது. அண்ணா பலகலைக் கழகத்தை ஒட்டி கிழக்கேயுள்ள கல்வி நிலையங்களில் புதிய கட்டிடங்கள் கட்ட கடைக்கால் போட்டபோது கடல் சிப்பி ஓடுகள் கிடைத்ததாக அங்கு பணியாற்றிய பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

1794-ம் ஆண்டு வெளியிடப்பட்ட சென்னைபகுதியில் எத்தனை ஏரிகள் இருந்தன என்ற வரைபடத்தையும் பார்த்திருக்கிறேன்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது

“ THE WHOLE OF MADRAS APPEARS TO BE BUILT ON SUCH BEDS WHICH HAVE BEEN LAID OPEN AT VARIOUS PLACES IN THE EXCAVATION OF WELLS“ என்று ப்ருஸ் ஃபுட் எழுதியுள்ளது சரியென்றே தோன்றுகிறது. இங்கே such beds என்று அவர் கூறுவது, “BEDS ABOUNDING IN THE REMAINS OF MARINE AND ESTURINE SHELLS OF LIVING SPECIES”.

இந்திய புவியியல் துறை ஆய்வுகளின்படி, பெசன்ட் நகர், அடையாறு, கிழக்கு சைதை , நந்தனம், மயிலை, மந்தைவெளி, திருவல்லிக்கேணி, இராயப்பேட்டை, தேனாம்பேட்டை, தி. நகர், கிழக்கு அசோக்நகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், சிந்தாதிரிப் பேட்டை, எழும்பூர், புரசை, சௌகார்பேட்டை, இராயபுரம், வண்ணாரப் பேட்டை, தொண்டயார்பேட்டை போன்ற பகுதிகளில் கடல்சார் வண்டல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதன்மூலம் கடந்த சில ஆயிரம் ஆண்டுகளில் வங்கக்கடல் பின் வாங்கியதால்தான், இந்த நிலப்பரப்பு நமக்குக் கிடைத்துள்ளது என்பது உறுதியாகிறது.


ஆம் ,வங்கக் கடல் தந்த கொடைதான் நம்ம சென்னை!

x