படுத்தி எடுக்கும் பன்னீரு!


ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

பதினாறு வகை செல்வம் இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கோம்ல. அதுக்கு மேலேயும் கூடுதலா சேர்ந்த செல்வம்தான் எனக்கு நட்பா அமைஞ்சிருக்கு. என்னோட அருமை நண்பர் பன்னீர்செல்வத்தைத்தாங்க சொல்றேன்! 

எப்படின்னு கேக்கறீங்களா... பேப்பர்ல ஏதாச்சும் ஒரு நியூஸ் படிச்சா நீங்களும் நானும் என்ன பண்ணுவோம்... அடுத்த பக்கத்துக்குப் போயிருவோம்.  பன்னீர் அப்படி இல்ல.  எனக்கு போன் அடிச்சுருவாரு.  ஒருநாளு அப்படித்தான், “தம்பி... நாலாம் பக்கத்துல மூணாம் பத்தியில சின்னதா ஒரு செய்தி போட்டிருக்கானே பார்த்தீங்களா?”ன்னாரு. நான் அசடு வழிஞ்சுகிட்டு  “எதிர் வீட்டுக்காரர் பேப்பர் இன்னும் தரல... அவரே அரை மணி நேரமாப் படிச்சுகிட்டு இருக்காரு”ன்னேன்.

”நாளைக்கு மெயின்டெனன்ஸாம்... காலைல 9 மணிக்கு கரன்ட் கட் பண்ணிருவாங்க. சாயங்காலம்தான் வரும். தெரிஞ்சுதா”னு கிரவுண்ட் ஃப்ளோர்ல உக்காந்துட்டு அவர் கத்துன கத்து எங்க அபார்ட்மென்ட் முழுக்கக் கேட்டிருக்கும். “ஒண்ணும் பிரச்னை இல்ல... டேங்க் ஃபுல்லாத்தான் இருக்கு”ன்னேன். ”அதில்ல தம்பி... உங்க வீட்டுல நாளைக்கு இட்லிக்கு அரைக்கணும்னு சொல்லிக்கிட்டுருந்தாங்க. அதான் சொன்னேன்”ன்னாரு. இட்லிக்கு அரைக்கிற விஷயத்த இவ எதுக்கு ஊர் முழுக்க டமாரம் அடிக்கிறான்னு சத்தம் போடத் தோணுச்சு. ஆனா, துணிச்சல் வரல.

x