விபத்தில் மூளைச்சாவு அடைந்த கணவரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய கர்ப்பிணி மனைவி @ சிவகாசி


தங்கப்பாண்டி

சிவகாசி: சிவகாசி அருகே சாலை விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்த கணவரின் உடல் உறுப்புகளை கர்ப்பிணி மனைவி தானமாக வழங்கினார்.

சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலமரத்துபட்டி பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி (25). இவர் கடந்த ஓராண்டுக்கு முன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த அம்ச ரேணுகா (22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தங்கப்பாண்டி தென்காசி மாவட்டம் சுரண்டையில் உள்ள பேக்கரியில் ஸ்வீட் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். அம்ச ரேணுகா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் தங்கப்பாண்டி கடந்த 29-ம் தேதி இரவு வேலை முடிந்து சுரண்டையில் இருந்து சிவகாசிக்கு பைக்கில் வந்தார். குகன்பாறை - துலக்கன்குறிச்சி இடையே வந்தபோது பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சறுக்கி விழுந்து விபத்து ஏற்பட்டது.

இதில் காயமடைந்த தங்கபாண்டியை அப்பகுதி மக்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கபாண்டி நேற்று மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து தங்கபாண்டியின் உடல் உறுப்புகளை தானம் அளிக்க அவரது மனைவி முன் வந்தார்.

இதையடுத்து, தக்கபாண்டியின் இதயம், நுரையீரல், கல்லீரல், இரு சிறுநீரகங்கள், இரு கண்கள் தானமாக வழங்கப்பட்டன. இதன் மூலம் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இன்று காலை திருத்தங்கல் ஆலமரத்துபட்டியில் அரசு மரியாதை உடன் தங்கபாண்டி உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. ஆர்.டி.ஓ விஸ்வநாதன் தலைமையில் டி.எஸ்.பி சுப்பையா, வட்டாட்சியர் வடிவேல், இன்ஸ்பெக்டர் வேதவல்லி ஆகியோர் தங்கபாண்டி உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.