மனச்சிதைவின் மானுட வாழ்வு


கணேசகுமாரன்

பின் அட்டை வாசகங்களுக்காக சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குள்ளான நாவல் ரமேஷ் பிரேதன் எழுதிய ஐந்தவித்தான். உளவியல் ரீதியான மன சிடுக்குகளைப் பேசும் நாவல் இரண்டு பாகமாய் விரிகிறது. மாதவன் அக்காவின் மரணத்திலிருந்து தொடங்குகிறது நாவல். மன நலம் பாதிக்கப்பட்ட அக்காவின் மரணத்துக்குக் காரணம் மாதவனின் அம்மா கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் ரிக்‌ஷாகாரனின் கொடூரமான அணுகுமுறை. தன் அப்பா இதனால்தான் அம்மாவை விட்டுப் பிரிந்திருக்கிறார் என்பதும் தான் மட்டுமே அவருக்குப் பிறந்தவன் என்பதெல்லாம் நாவல் போகும் போக்கில் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லப்படுகிறது.

இடையில் மாதவனுக்கு வரும் இரண்டு காதலும் அவை எவ்வாறு நிறைவேறாமல் போகின்றன என்பதும் வலிந்து திணிக்காமல், மாதவனின் வலி மிகுந்த பார்வையிலே கதையாய் விரிகிறது. மகளின் சாவுக்கு ரிக்‌ஷாகாரனே காரணம் என்பதைத் தாமதமாக உணரும் அம்மா அவனைக் கொல்கிறாள். கணவன், மகள், மகனின் பிரிவு அம்மாவை மன நோய்க்குத் தள்ளுகிறது. பைத்தியமாகத் திரியும் அம்மா ஊரை விட்டு விலகி பிறிதொரு இடத்தில் இறந்தும் போகிறாள்.

திருமணம் செய்துகொள்ளாத மாதவன் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கிறான். முன் நாளின் தோழி ஒருத்தியைச் சந்திக்கிறான். அவளுக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இரு குழந்தைகளும் வளர வயதான மாதவன் இறப்பதுடன் நாவலின் முதல் பாகம் முடிகிறது.

x