புதுடெல்லி: முதல் முறையாக எம்.எல்.ஏ.வான ரேகா குப்தாவை டெல்லி முதல்வராக பாஜக தேர்வு செய்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. இதன்மூலம் டெல்லிக்கு மீண்டும் ஒருமுறை பெண் முதல்வர் கிடைத்துள்ளார்.
டெல்லி பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் புதன்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெற்றது. 48 எம்எல்ஏக்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் டெல்லியின் அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான மத்திய பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட ரவிசங்கர் பிரசாத், ஓம் பிரகாஷ் தன்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், டெல்லி முதல்வராக ரேகா குப்தா தெர்ந்தெடுக்கப்பட்டு முறைப்படி அறிவிக்கப்பட்டார்.
டெல்லியின் அடுத்த முதல்வராக பதவியேற்கும் 50 வயதான ரேகா குப்தா முதல் முறையாக எம்.எல்.ஏ ஆனவர். அண்மையில் நடந்த டெல்லி தேர்தலில் ஷாலிமார் பாக் சட்டமன்ற தொகுதியில் 29,595 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்.
மூன்று முறை கவுன்சிலராக பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், தெற்கு டெல்லி நகராட்சியின் மேயராகவும் செயலாற்றியவர். மாணவ பருவத்திலேயே அரசியலுக்கு நுழைந்த ரேகா குப்தா டெல்லி பாஜகவில் பல்வேறு பதவிகளை வகித்தவர். குறிப்பாக, டெல்லி பாஜக மகளிர் அணி பொதுச் செயலாளராக திறம்பட செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“பாஜகவுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். டெல்லியை புதிய உயரங்களைத் தொடும் வகையில் செயல்பட நான் உறுதிபூண்டுள்ளேன்” என்று ரேகா குப்தா கூறினார்.
டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு துணைநிலை ஆளுநர், புதிய முதல்வர் ரேகா குப்தாவுக்கு பதவி ஏற்பு செய்து வைக்கிறார். இவருடன் புதிய அமைச்சர்களும் இதே மேடையில் பதவி ஏற்க உள்ளனர்.
இந்த பிரம்மாண்ட நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், திரை நட்சத்திரங்களும் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை வசப்படுத்தியது. ஆம் ஆத்மி 22 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.