புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் 2025-ல் அமோக வெற்றி பெற்ற பாஜகவுக்கும், தோல்வியடைந்த ஆம் ஆத்மிக்கும் இடையிலான வாக்குகள் வித்தியாசம் வெறும் 1.99 சதவிகிதம் மட்டுமே.
இந்தத் தேர்தலில் பாஜக 45.56 சதவீதம், ஆம் ஆத்மி 43.57 சதவீத வாக்குகளை பெற்றன. இவற்றுக்கு இடையேயான வித்தியாசம் வெறும் 1.99 சதவிகிதம் மட்டுமே. காங்கிரஸ் கட்சி 6.34 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இது கடந்த 2020 தேர்தலில் பெற்றதை விட 2 சதவிகிதம் அதிகம். 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ், ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு தடையாக இருந்துள்ளது.
2025 டெல்லி பேரவைத் தேர்தலில் வரலாற்று வெற்றி பெற்றிருக்கும் பாஜக, 27 ஆண்டுகளுக்கு பின்பு அரியணையைக் கைப்பற்றி இருக்கிறது. மறுபுறம் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து டெல்லியில் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி, வாக்கு சதவீதம் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கையில் கணிசமான பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.
ஆம் ஆத்மி கட்சி இந்த தேர்தலில் தனது வாக்கு விகிதத்தில் கிட்டத்தட்ட 10 சதவீதத்தை இழந்துள்ளது. அதாவது, கடந்த 2020 பேரவைத் தேர்தலில் 53.57 சதவீதமாக இருந்த வாக்கு விகிதம், இந்த 2025 தேர்தலில் 43.55 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த சரிவு ஆம் ஆத்மி வெற்றி பெற்ற தொகுதிகளிலும் எதிரொலித்துள்ளது.
பாஜகவின் வாக்கு சதவீதம் 7.3 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2020 தேர்தலில் 38.51 சதவீதம் பெற்றிருந்த பாஜக, இந்த 2025 தேர்தலில் 45.76 சதவீதம் பெற்றுள்ளது. இந்த ஏற்றம் பாரதிய ஜனதா கட்சிக்கு 48 இடங்களை கைப்பற்றவும், ஆட்சி அமைக்கவும் வழிவகுத்துள்ளது.
ஆம் ஆத்மிக்கு அதிகமான இழப்பு டெல்லியின் மூன்று தொகுதிகளில் ஏற்பட்டுள்ளது. புதுடெல்லியில் கேஜ்ரிவால், ஜங்புராவில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் கிரேட்டர் கைலாஷில் மாநில அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் ஆகியோர் காங்கிரஸால் தோல்வியை சந்தித்தனர். இந்த மூன்றின் வெற்றி வித்தியாசத்தை விட, காங்கிரஸ் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தது.
கால்காஜியில் முதல்வர் ஆதிஷி 3,521 வாக்குகளில் பாஜகவின் முதல்வர் வேட்பாளர்களில் ஒருவரான ரமேஷ் பிதூரியை வென்றுள்ளார். இங்கு காங்கிரஸின் அல்கா லம்பாவுக்கு கிடைத்த 4,342 வாக்குகளை விட சிறிது கூடுதலாகப் பெற்றிருந்தால் ஆதிஷியும் தோல்வி பெற்றிருப்பார்.