மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி சலுகை மூலம் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை. இது தவிர, நிலையான வருமான வரி விலக்கு ரூ.75,000 உள்ளது. எனவே, சம்பளம் பெறுவோர் ஆண்டுக்கு ரூ.12,75,000 வரை வருமான வரி செலுத்தத் தேவையில்லை.
வரி செலுத்துவோர் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் இருந்தால் அவர்கள் ரூ.60,000 அளவுக்கு சேமிக்க முடியும். இனி, மாதம் ரூ.1,06,250 வரை ஊதியம் பெறுபவர்களுக்கு வரி கிடையாது. அதே நேரத்தில் மாத வருமானத்திலோ, ஆண்டு வருமானத்திலோ மிகச் சிறிய உயர்வு இருந்தால் கூட குறைந்தபட்சம் ரூ.60,000 வரி செலுத்த வேண்டியிருக்கும். உதாரணமாக ஒருவரது ஆண்டு வருமானம் ரூ.1 அதிகரித்தால் கூட அவரது வருமானம் ரூ.12 லட்சத்துக்கு மேலே சென்று விடுகிறது.
ரூ.12 லட்சம் வரை மட்டுமே வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலே சென்றால் புதிய வரி விகிதங்கள் அடிப்படையில் வரி செலுத்த வேண்டும். அதன்படி, வருமானத்தின் முதல் ரூ.4 லட்சத்துக்கு வரி இல்லை. அடுத்த ரூ.4 லட்சத்துக்கு 5 சதவீதம் அடிப்படையில் ரூ.20 ஆயிரம், அடுத்த ரூ.4 லட்சத்துக்கு 10 சதவீதம் அடிப்படையில் ரூ.40 ஆயிரம் என மொத்தம் ரூ.60 ஆயிரம் வரியாக செலுத்த வேண்டும்.
பழைய வரி விதிப்பு முறைப்படி கணக்கிட்டாலும் ரூ.60 ஆயிரத்துக்கு மேலே செலுத்த வேண்டியுள்ளது. பழைய முறைப்படி, முதல் ரூ.2.50 லட்சத்துக்கு வரி எதுவும் இல்லை. அடுத்த ரூ.2.50 லட்சத்துக்கு 5 சதவீதம், அடுத்த ரூ.5 லட்சத்துக்கு 20 சதவீதம், அதற்கு மேல் 30 சதவீதம் என வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அப்படி பார்த்தால் ரூ.12 லட்சத்து 75 ஆயிரத்துக்கு மேல் கூடுதலாக ஒரு ரூபாய் வருமானம் பெறும் ஒருவர், வீட்டுக் கடன், கல்விக் கடன், சேமிப்பு, மருத்துவ செலவு என வரி விலக்கு பெறத் தகுதியுள்ள பல்வேறு இனங்களில் சேர்த்து ரூ.5,37,500 அளவுக்கு கழிவு பெற வேண்டும். அப்போது தான், மீதமுள்ள ரூ.7,37,500-க்கு ரூ.60 ஆயிரம் வரி செலுத்தலாம்.
ஆனால், வெகு சிலருக்கே இந்த அளவுக்கு அதிகமான தொகையை கழிவு பெற முடியும். மிகப் பெரும்பாலானோருக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை மட்டுமே கழிவு பெற முடியும் என்பதால், பழைய முறைப்படி ரூ.60,000-க்கு அதிகமாகவே வரி செலுத்த வேண்டியிருக்கும்.
இதன் காரணமாக புதிய முறையையே தேர்வு செய்தாக வேண்டும். ஆகவே, ரூ.12 லட்சத்து 75 ஆயிரத்துக்கு மேல் கூடுதலாக ஒரு ரூபாய் அதிக வருமானம் இருந்தால் கூட, குறைந்தபட்சம் ரூ.60 ஆயிரம் வரி செலுத்த வேண்டியது கட்டாயம் என்று கூறப்படுகிறது.
அரசுக்கு இழப்பா? - ‘வருமான வரி விலக்கு உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டு இருப்பதால் மக்கள் தாராளமாக செலவு செய்வார்கள். இதன் காரணமாக ஜிஎஸ்டி வரி, சுங்க வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் மூலம் மத்திய அரசுக்கு போதிய வருவாய் கிடைத்துவிடும். நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 85 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்குள்ளேயே வருவாய் ஈட்டுகின்றனர். புதிய வரி விகிதத்தால் அவர்கள் பலன் அடைவார்கள்.
சம்பளதாரர்கள் அதிகபட்சமாக ஓராண்டில் ரூ.60,000 வரை சேமிக்க முடியும். ஒருவருக்கு ரூ.10,000 வரை வரி சேமிப்பு கிடைக்கிறது என்றால் அவர் நிச்சயமாக ரூ.8,000 வரை செலவு செய்வார். இதன் மூலம் பல்வேறு வகைகளில் மத்திய அரசுக்கு வருவாய் கிடைக்கும். மேலும் புதிய வரி விகிதத்தால் வாகன விற்பனை, ரியல் எஸ்டேட் துறை அபரிமிதமாக வளர்ச்சி அடையும்.
நாடு முழுவதும் ஒரே வருமான வரி விகிதமே நடைமுறையில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் பழைய வரி விகிதம் நிச்சயமாக ஒருநாள் ரத்து செய்யப்படும் என்று நிதித் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.