அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் காவல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு


ஹைதராபாத்: சந்தியா திரையரங்கில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜுனை 14 நாட்கள் காவலில் நாம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தானா நடிப்பில் கடந்த 5ம் தேதி ‘புஷ்பா 2’ படம் வெளியானது. படம் வெளியான முதல் நாள் ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் ப்ரீமியர் ஷோ திரையிடப்பட்டது. ரசிகர்களுடன் படம் பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் திரையரங்கிற்கு வந்திருந்தார். இதனால், ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயதான ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது மகனும் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார்.

இதனால், அல்லு அர்ஜூன் மற்றும் சந்தியா திரையரங்க உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரேவதியின் குடும்பத்திற்கு வருத்தம் தெரிவித்தது மட்டுமல்லாது ரூ.25 லட்சம் நிதியுதவியும் அளித்தார். மேலும், தன் மீதுள்ள வழக்கை நீக்கும்படியும் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் ஏற்கனவே, திரையரங்க உரிமையாளர் மற்றும் மேலாளர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று சிக்கடப்பள்ளி காவல் துறையினரால் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டிருக்கிறார். நாம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அல்லு அர்ஜூனை 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

x