மகாராஷ்டிராவில் போட்டியிடவில்லை; கேஜ்ரிவால் பிரச்சாரம் செய்வார் - அறிவித்தது ஆம் ஆத்மி


புதுடெல்லி: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாது என்றும், அதற்கு பதிலாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், மகா விகாஸ் அகாதி கூட்டணிக்காக பிரச்சாரம் செய்வார் என்று ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா தேர்தலில் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ், என்சிபி (சரத்பவார்) மற்றும் சிவசேனா (உத்தவ் தாக்கரே) ஆகிய கட்சிகள் தலா 85 இடங்களில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன.

இந்த நிலையில் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாது என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி சஞ்சய் சிங் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், மகா விகாஸ் அகாதி கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்வார். ஆம் ஆத்மி கட்சி மகாராஷ்டிரா தேர்தலில் போட்டியிடாது" என்று தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சி வட்டார தகவல்களின்படி, மகாராஷ்டிராவில் அரவிந்த் கேஜ்ரிவால் பிரச்சாரம் செய்வது குறித்து சிவசேனா மற்றும் என்சிபி ஆகிய கட்சிகள் தொடர்பு கொண்டுள்ளன. அதேபோல ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் ஹேமந்த் சோரனின் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்காக அரவிந்த் கேஜ்ரிவால் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்காக டெல்லி, குஜராத் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் இண்டியா கூட்டணியில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணி வைத்தது. ஆனால், பஞ்சாபில் தனித்துப் போட்டியிட்டது. அதேநேரத்தில் ஹரியானாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட ஆம் ஆத்மி தோல்வியை தழுவியது. காங்கிரஸும் தோற்றது.

மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே ) மற்றும் அஜித் பவார் தலைமையிலான என்சிபி கட்சிகள் ஆளும் மகாயுதி கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.

மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கும் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 20-ஆம் தேதி வாக்குப் பதிவும், நவம்பர் 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. ஜார்க்கண்டில் நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் நவம்பர் 23 ஆம் தேதி எண்ணப்படும்.

x