எல்லையில் ரோந்துப் பணி ஏற்பாடுகள் தொடர்பாக இந்தியா - சீனா இடையே ஒப்பந்தம் கையெழுத்து


புதுடெல்லி: மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்தியா - சீனா இடையே பேச்சுவார்த்தைக்கான அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்து வருகின்றனர். இதில் இந்தியாவும் சீனாவும் எல்லை கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) பகுதிகளில் ரோந்து ஏற்பாடுகள் குறித்த ஒப்பந்தத்தை எட்டியுள்ளன. இது 2020-ம் ஆண்டில் எழுந்த பிரச்சினைகளைத் தீர்க்கும். இதில் நாங்கள் அடுத்தகட்ட நகர்வுக்கு முயற்சி செய்வோம்" என்றார்.

எதிர்வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா செல்லவிருக்கிறார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த விக்ரம் மிஸ்ரி மேற்கண்ட தகவலை கூறினார். முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம், இந்தியாவும் சீனாவும் எல்லை நிலவரம் குறித்து விவாதம் நடத்தின. அப்போது எல்லையில் கூட்டாக அமைதியை பராமரிக்க முடிவு செய்தன. இரு தரப்பினரும் தங்கள் கருத்து வேறுபாடுகளை குறைத்து, நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண முயன்றனர். இதற்காக ராஜதந்திர மற்றும் ராணுவ வழிகளில் தொடர்புகளை தீவிரப்படுத்த அவர்கள் ஒப்புக்கொண்டனர்

x