ஜார்க்கண்டில் வாக்களிக்கப் போகும் 995 பேர் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள்: ஆச்சர்ய புள்ளி விவரம்


ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ள 43 சட்டசபை தொகுதிகளில், வாக்களிக்கப் போகும் 995 பேர் நூறு வயதை தாண்டியவர்கள் என்ற ஆச்சர்ய புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23ஆம் தேதி எண்ணப்படும். இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி அக்டோபர் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

43 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 13-ஆம் தேதி நடைபெறவுள்ள முதல் கட்ட தேர்தலில் 462 ஆண் வாக்காளர்கள், 533 பெண் வாக்காளர்கள் என 100 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 995 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் உறுதி செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜார்க்கண்ட் தேர்தலில் 11.84 லட்சம் முதல்முறை வாக்காளர்கள் மற்றும் 1.13 லட்சம் மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் உட்பட மொத்தம் 2.60 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

x