ஹைதராபாத் கிரிக்கெட் சங்க நிதி முறைகேடு: முகமது அசாருதீனுக்கு அமலாக்கத் துறை சம்மன்


ஹைதராபாத்: ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவராக முகமது அசாருதீன் இருந்த காலத்தில், ரூ.20 கோடி அளவுக்கு நிதிமுறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு ஜெனரேட்டர்கள், கூடாரங்கள், தீயணைப்பு கருவிகள் உட்பட பல பொருட்கள் வாங்கியதில் இந்த முறைகேடு நடைபெற்றுள்ளது. பல பணிகள் நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குப்பின் மிக தாமதமாக முடிக்கப்பட்டுள்ளன. இதனால் செலவுகள் அதிகரித்துள்ளன.

கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தாங்கள் விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கு சந்தை விலையை விட கூடுதல் தொகைக்கு ஒப்பந்தங்களை வழங்கியுள்ளனர். பல ஒப்பந்ததாரர்களுக்கு முன் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் எந்தப் பணியும் செய்யவில்லை என போலீஸாரின் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை கடந்தாண்டு சோதனை நடத்தி டிஜிட்டல் ஆவணங்களை கைப்பற்றியது. அதில் ரூ.10.39 கோடிக்கு போலி ஆவணங்கள், கணக்கில் வராத பணம் ரூ.10.39 கோடி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்த விசாரணைக்கு நேற்று ஆஜராகும்படி முகமது அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், தனக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் முகமது அசாருதீன் கேட்டுள்ளார்

x