லடாக் பகுதிக்கு தன்னாட்சி அதிகாரம் கோரி டெல்லிக்கு பேரணியாக சென்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் கைது


புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட் டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு காஷ் மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதில் ஜம்மு காஷ்மீருக்கு சட்டப்பேரவை இருக்கும் என்றும் லடாக்பகுதிக்கு சட்டப்பேரவை இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்திய அரசியல் சாசனத்தின் 6-வது அட்டவணைப்படி, அசாம், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் மலைப்பாங்கான பகுதிகளை நிர்வகிக்க தன்னாட்சி கவுன்சில் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு நிலம் மற்றும் கலாச்சார அடையாளத்தை பாதுகாக்க சட்டம் இயற்றுவது, நீதி, நிர்வாகம் மற்றும் நிதி அதிகாரங்கள் உள்ளன.

அந்த வகையில், மலைப் பிரதேசமான லடாக் பகுதியையும் 6-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என அப்பகுதி மக்கள்கோரி வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசு லடாக் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வலியுறுத்தி சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் தலைமையில் நூற்றுக் கணக்கானோர் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

நேற்று முன்தினம் இரவு அவர்கள் சுங்கு எல்லையை சென்றடைந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த டெல்லி போலீஸார் தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள தால் திரும்பிச் செல்லுமாறு கூறினர். இதை ஏற்க மறுத்ததால் சோனம் உள்ளிட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 163-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளத்தில், “டெல்லியை நோக்கி அமைதியான முறையில் பேரணியாக வந்த லடாக் குடிமக்களை மோடி அரசு ஆணவப் போக்குடன் கைதுசெய்துள்ளது. இது கோழைத்தனமான மற்றும் ஜனநாயக விரோதசெயல் ஆகும்” என பதிவிட்டுள்ளார். இதுபோல், ஆம் ஆத்மியின் அர்விந்த் கேஜ்ரிவால், சமாஜ்வாதியின் அகிலேஷ் உள்ளிட்டோரும் சோனம் கைது செய்யப்பட்ட தற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்

x