காய்கறி வியாபாரி கொடூரக் கொலை... வேகமாக காரில் வந்தவர்களைக் கண்டித்ததால் நடந்த பயங்கரம்!


தாறுமாறாக கார் ஓட்டி வந்தவர்களைத் தட்டிக்கேட்ட காய்கறி வியாபாரியை வெட்டிக்கொலை செய்த கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள ஹோஸ்கோட் தாலுகாவில் உள்ள கங்காபுரா பகுதியைச் சேர்ந்தவர் நவீன் நாயக்(27). இவர் ஹோஸ்கோட் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில், ஹோஸ்கோட் புறநகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 75-ல் தாபா அருகே நவீன் நாயக் நேற்று மாலை கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஹோஸ்கோட் காவல் நிலைய போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், நெடுஞ்சாலையில் ஒரு கும்பல் காரை வேகமாக ஓட்டி வந்துள்ளது. அப்போது அப்பகுதியில் காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நவீன், அவர்களிடம், மெதுவாக வந்தால் என்ன எனக்கேட்டுள்ளார். இதனால், அந்த காரில் வந்த கும்பலுக்கும், நவீன் நாயக்கிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த கும்பல், பயங்கர ஆயுதங்களால் நவீன் நாயக்கை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது தெரிய வந்தது.

இந்த கொலைக்குக் காரணம் காரில் வந்தவர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமா, வேறு ஏதாவது காரணம் உள்ளதா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காய்கறி வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x