மிக்ஜாம் புயல்... ஆந்திராவில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!


ஆந்திர மாநிலம் பாபட்லாவில் மிக்ஜாம் புயல் காரணமாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

சென்னையைப் புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயல், ஆந்திரா மாநிலத்தில் இன்று கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அம்மாநிலத்தில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் சாலையில் பெருக்கெடுத்த மழை வெள்ளத்தில் ஊர்ந்து செல்லும் வாகன ஓட்டிகள்

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் தாக்கம் காரணமாக சென்னை நிலைகுலைந்துள்ளது. தற்போது மழை, வெள்ளம் வடியத் தொடங்கி வருகிறது. இந்நிலையில் இந்த புயல் ஆந்திர மாநிலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று காலை நிலவரப்படி, மிக்ஜாம் புயலானது ஆந்திர மாநிலம், நெல்லூருக்கு வடகிழக்கில் சுமார் 30 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு சுமார் 170 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வட திசையில் நகர்ந்து இன்று முற்பகல், தெற்கு ஆந்திர கடல் பகுதியில் பாபட்லா அருகே கரையைக் கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஆந்திர மாநிலத்தில் மீட்பு பணி மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு தயார் நிலையில் இருக்குமாறு அனைத்து அரசுத் துறையினருக்கும் அம்மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி அறிவுறுத்தியுள்ளார்.

மிக்ஜாம் புயல் காரணமாக ஆந்திரா மாநிலத்தில் திருப்பதி, நெல்லூர், பிரகாசம், பாபட்லா, கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கொணசீமா மற்றும் காக்கிநாடா ஆகிய 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையம் அப்போது மணிக்கு சுமார் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் இன்று கரையைக் கடந்தாலும் ஆந்திரா மாநிலத்தில் குறிப்பிட்ட நகரங்களில் வரும் வியாழக்கிழமை வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவி்ததுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காட்டுப்பாக்கத்தில் 29 செ.மீ. மழையும், நுங்கம்பாக்கத்தில் 24 செ.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 19 செ.மீ. மழையும் பெய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம், நந்தனத்தில் தலா 18 செ.மீ., பள்ளிக்கரணையில் 17 செ.மீ., மழை பெய்துள்ளது.

x