சூப்பர் பிளான்... ட்ரோன் தாக்குதலை சமாளிக்க கழுகுகளை பழக்கிய தெலங்கானா போலீஸ்!


ட்ரோன்களை முறியடிக்கும் கழுகு

விவிஐபி வருகை, பொதுக் கூட்டங்களின் போது ட்ரோன் அச்சுறுத்தலை தவிர்க்க கழுகுகளை அனுப்பும் வழிமுறையை தெலங்கானா போலீஸார் கண்டறிந்துள்ளனர்.

எதிரிகளின் ட்ரோன்களை இடைமறிக்க பயிற்சி அளிக்கப்பட்ட கழுகுகளை பயன்படுத்தும் முறை நெதர்லாந்து, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப்படுகின்றன. இந்நிலையில், தெலங்கானா மாநில போலீஸார் இதனை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, கடந்த சில ஆண்டுகளாக 3 கழுகுகளுக்கு ட்ரோன்களை இடைமறிக்கும் பயிற்சி அளித்து வந்தனர்.


ஹைதராபாத்தின் புறநகரில் உள்ள மொய்னாபாத்தில் உள்ள ஒருங்கிணைந்த புலனாய்வு பயிற்சி அகாடமியில் (ஐஐடிஏ) காவல்துறை இயக்குநர் ஜெனரல் ரவி குப்தா மற்றும் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சமீபத்தில் நடத்திய ஒத்திகையில், பயிற்சி பெற்ற கழுகுகள் ட்ரோன்களை திறம்பட வீழ்த்தின.

தெலங்கானாவில் ட்ரோன்களை முறியடிக்க கழுகுக்குப் பயிற்சி

இந்தியாவில் ட்ரோன்களை வீழ்த்த காவல் துறை இதுபோன்ற வழிமுறைகளை கையாள்வது இதுவே முதல் நிகழ்வாக கருதப்படுகிறது. எதிரிகளின் ட்ரோன்களை குறிவைக்க இந்திய ராணுவம், பட்டங்களை பயன்படுத்தியதாகவே இதற்கு முன்பு செய்திகள் வந்துள்ளன.


இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஆளில்லா வான்வழி விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள், வெடிமருந்துகள், போதைப்பொருட்களை கடத்தும் சம்பவங்கள் கடந்த 2021 முதல் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக எல்லைப் பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) தெரிவித்துள்ளது.

இச்சூழலில் தெலங்கானா மாநில காவல் துறை, எதிரிகளின் ட்ரோன்களை வீழ்த்த கழுகளுக்கு பயிற்சி அளித்துள்ள நிகழ்வு பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x