‘என் தலைவிதி மக்கள் கையில்...’ - டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ராஜினாமா அறிவிப்பு


புதுடெல்லி: அடுத்த இரண்டு நாட்களில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அரவிந்த் கேஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “இனி முதல்வர் நாற்காலியில் இருக்கப்போவதில்லை. இன்னும் 2 நாட்களில் நான் பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன். ஆம் ஆத்மி கட்சியின் எதிர்காலம் வாக்காளர்களிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. நான் டெல்லியின் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பேசுவேன். வாக்களித்து மக்கள் மீண்டும் என்னை டெல்லி முதல்வராக்கிய பின்பே முதல்வர் இருக்கையில் அமர்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி மதுபான கொள்கை தொடர்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீன் பெற்றிருந்த அரவிந்த் கேஜ்ரிவால், சிபிஐ தொடந்த வழக்கால் தொடர்ந்து சிறையில் இருந்தார். அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை (செப்.13) உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதற்காக அவருடன் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்த பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தார்மிகப் பொறுப்பேற்று முதல்வர் கேஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், அடுத்த 48 மணி நேரத்துக்குள் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகத் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதனால் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

“நான் கைது செய்யப்பட்டபோது ஏன் ராஜினாமா செய்யவில்லை என்றால், அப்போது நான் அரசமைப்பைக் காப்பாற்ற வேண்டும் என நினைத்தேன். அதனால் ராஜினாமா அழுத்தங்களை ஏற்கவில்லை. இப்போதும் கர்நாடக முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது அவர்கள் (மத்திய அமைப்புகள்) வழக்குத் தொடர்ந்துள்ளனர். பாஜக அல்லாத கட்சியின் முதல்வர்களே, உங்கள் மீது வழக்கு தொடர்ந்தால் தயவு செய்து ராஜினாமா செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்து வரும் இரு தினங்களில் அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டு கட்சியில் இருந்து ஒருவரை முதல்வராக அறிவிக்கவுள்ளோம். மணீஷ் சிசோடியா முதல்வராக இருக்க மாட்டார். அவரிடம் நான் இது குறித்துப் பேசினேன். அவரும் ‘மக்கள் நம் நேர்மையை அங்கீகரிக்கட்டும்’ என்று கூறிவிட்டார். இனி எனது விதியும், சிசோடியாவின் விதியும் மக்கள் கைகளில் இருக்கின்றன. தேசத்துக்கான எனது போராட்டம் தொடரும். மத்திய அரசின் சதிகளால் என்னுடைய உறுதியைத் தகர்க்க முடியாது.” என்றார்.

சிறைவாசம் குறித்து நினைவுகூர்ந்த கேஜ்ரிவால், “நான் சிறையில் இருந்து ஒரே ஒரு கடிதம் மட்டுமே எழுதினேன். அதுவும் சுதந்திர தினத்தன்று நான் இல்லாத நிலையில் அமைச்சர் அதிஷி தேசியக் கொடியை ஏற்ற அனுமதிக்கக் கோரி துணை நிலை ஆளுநருக்கு எழுதினேன். அந்தக் கடிதம் திரும்பி வந்துவிட்டது. மீண்டும் கடிதம் எழுதினால் நான் எனது குடும்பத்தாரைக் காண முடியாது என்று எனக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது” என்றார்.

x