பாஜக இருக்கும்வரை இட ஒதுக்கீட்டை யாராலும் ஒழிக்க முடியாது: அமித் ஷா சவால்


புது டெல்லி: பாஜக இருக்கும்வரை யாராலும் இட ஒதுக்கீட்டை ஒழிக்க முடியாது; தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத் தலும் ஏற்படுத்த முடியாது என்று ராகுல் காந்திக்கு தெரிவிக்க விரும்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்திஅங்குள்ள ஜார்ஜ் டவுன் பல்கலைக் கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ராகுல் காந்தியிடம் “இந்தியாவில் இட ஒதுக்கீடு இன்னும் எவ்வளவு காலம் தொடரும்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், “இந்தியாவில் 200 தொழில் அதிபர் களை எடுத்துக்கொண்டால் அதில்,எனக்குத் தெரிந்து ஒரே ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் மட்டுமே அந்தப் பட்டியலில் உள்ளார். இந்தியாவில் 50% மக்கள் ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அப்படியிருக்க நாம் பிரச்சினைக்கு சரியாகக் கவனம் செலுத்தவில்லை என்பதே உண்மை. இந்தியா ஒரு நியாயமான இடத்தை அடையும்போது, இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து சிந்திப்போம்” என்றார்.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவு: நாட்டை பிளவுபடுத்த சதி செய்யும் சக்திகளுடன் நிற்பதும், தேசவிரோத கருத்துகளை வெளியிடுவதும் ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் வாடிக்கையாகிவிட்டது. நாட்டு நலனுக்கு எதிரான ஜம்மு காஷ்மீரின் தேசியமாநாட்டு கட்சியை ஆதரிப்பது, வெளிநாட்டு மேடைகளில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைப் பேசுவது என ராகுல் காந்தி எப்போதும் தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதமாகவும், இந்தியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் செயல்படுகிறார்.

பிராந்தியம், மதம், மொழி வேறுபாடுகளின் அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தும் காங்கிரஸின் அரசியலை ராகுல் காந்தியின் பேச்சு அம்பலப்படுத்தியுள்ளது. நாட்டில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸின் இடஒதுக்கீட்டுக்கு எதிரான முகத்தைமீண்டும் ஒருமுறை முன்னிலைப்படுத்தி உள்ளார். அவர் மனதில் இருந்த எண்ணங்கள் கடைசியில் சொற்களாக வெளிப்பட்டுவிட்டன. பாஜக இருக்கும்வரை யாராலும் இட ஒதுக்கீட்டை ஒழிக்க முடியாது; தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலும் ஏற்படுத்த முடியாது என்று ராகுல்காந்திக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். இவ்வாறு அமித் ஷா கூறினார்.

இதைத் தொடர்ந்து பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், ‘‘முன்னாள் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகிய மூவருமே சாதிவாரி இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள்தான். ராகுல் காந்தியின் இந்த கருத் துக்கு எதிர்த்தரப்பான இண்டியா கூட்டணியைச் சேர்ந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராஷ் டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் இடதுசாரி தலைவர்கள் கட்டாயம் எதிர்வினையாற்ற வேண்டும். இட ஒதுக்கீட்டை ஒழித் துக்கட்டும் முயற்சியில் காங்கிரஸ் இறங்குமேயானால் பாஜக கடுமையாக அதனை எதிர்க்கும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்’’ என்று தெரிவித்தார்

x