மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கவலைக்கிடம்


புதுடெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) கடுமையான சுவாசக் கோளாறு பிரச்சினை காரணமாக டெல்லி எய்ம்ஸ்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சீதாராம் யெச்சூரி சுவாச பாதை நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுவதற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மருத்துவ குழுக்கள் அவரது நிலையை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன. இவ்வாறு கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

சீதாராம் யெச்சூரி நிமோனியா போன்ற மார்புத் தொற்று சிகிச்சைக்காக ஆகஸ்ட் 19-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிபிஐ (எம்) கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராகவும் உள்ள யெச்சூரிக்கு சமீபத்தில்தான் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

1996-ல் ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கான பொதுவான குறைந்தபட்ச செயல் திட்டத்தைஉருவாக்குவதற்கு ப.சிதம்பரத்துடன் இணைந்து யெச்சூரி முக்கிய பங்களிப்பை வழங்கினார். 2004-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தை உருவாக்குவதிலும் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

1975-ல், ஜேஎன்யுவில் யெச்சூரி மாணவராக இருந்தபோது, ​​அவசரநிலை காலத்தில் கைது செய்யப்பட்டார். 1977-78 இடையிலான ஓராண்டில் மூன்று முறை ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

x