நீட் தேர்வு மாணவர் தற்கொலை: கோட்டாவில் தொடரும் துயரம்; இந்த ஆண்டில் 13வது மரணம்


ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நேற்று நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றுவந்த 21 வயது மருத்துவ மாணவர் தற்கொலை செய்துகொண்டார். கோட்டாவில் இந்த ஆண்டில் இதுவரை 13 பயிற்சி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பர்சானாவின் மதுரா பகுதியை சேர்ந்தவர் பர்சுராம். இவர் தேர்வுக்கு தயாராவதற்காக கடந்த வாரம் கோட்டாவுக்கு வந்தார். அவர் அங்குள்ள ஒரு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றபடி, தனியாக அறை எடுத்து தங்கியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில், அவர் தங்கியுள்ள வீட்டின் உரிமையாளர் அனூப் குமார், பர்சுராமை நீண்ட நேரமாக வெளியில் காணாததால் சந்தேகம் அடைந்துள்ளார். நீண்ட நேரமாக அறையின் கதவை தட்டியும் திறக்காததால், அவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

போலீஸார் அறையின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, பர்சுராம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். அவரது உடல் எம்.பி.எஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பர்சுராமின் குடும்ப உறுப்பினர்கள் கோட்டாவுக்கு வந்தபின்னர் பிரேதப் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பர்சுராமின் தற்கொலைக்குப் பின்னால் உள்ள காரணங்கள் தெளிவாக தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

ஜேஇஇ மற்றும் நீட் போன்ற போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் அதிகம் உள்ள இடமாக திகழும் கோட்டாவில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 13 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், தற்கொலைகளைத் தடுக்கவும் கோட்டா காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் நிலையில் மீண்டும் ஒரு தற்கொலை நடந்துள்ளது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 - 24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

x